பி. கு. உமா தேவி, மதுரை
ஒரு காட்டில் குடிசை ஒன்றில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவரிடத்தில் இரண்டு பேர் வந்தனர். அவரிடம் ஐயா ரிஷி அவர்களே, நாங்கள் பாவங்கள் செய்துள்ளோம். அதனை போக்க ஏதாவது உபாயம் உள்ளதா என்று கேட்டனர். அதற்கு அந்த
முனிவர் அவர்களிடத்தில் நீங்கள் இருவரும் செய்த பாவங்களை கூறுங்கள். பிறகு அதை போக்க வழிகள் கூறுகின்றேன் என்றார். வந்தவர்களில் ஒருவர், தவசி அவர்களே நான் ஒருவரை
கோபத்தால் கொன்றுவிட்டேன். நான் தான் கொன்றேன் என யாருக்கும் தெரியாது. நான் ஓடி வந்துவிட்டேன். இந்த மகா பாவத்தை போக்க வழி கூறுங்கள் என்று கேட்டார்.
இரண்டாவது நபர், ஐயா முனிவர் பெருமானே! இவனைப் போல் பெரும் பாவத்தை எல்லாம் நான் செய்யவில்லை. சிறு சிறு தவறுகள் தான் செய்துள்ளேன் என்றார். அதற்கு முனிவரோ அப்படி என்னவெல்லாம் செய்துள்ளாய் எனக் கேட்டார். அந்த இரண்டாம் நபர், பொய் சொல்லியுள்ளேன், திருடுவேன், தேவைப்பட்டால் கேட்காமல் எடுத்துக் கொள்வேன், கோபப்படுவேன், ஏமாற்றி நிறைய லாபம் அடைவேன், இப்படி சின்னச் சின்ன பாவம் தான்
செய்துள்ளேன் ஐயா என்றார். முனிவர் சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு, இருவரும் நான் சொல்லும் காரியத்தை செய்து விடுங்கள். உங்களின் பாவங்கள் போனது போல் ஆகிவிடும்
என்றார்.
கூறுங்கள் ஐயா நாங்கள் உடனே செய்கிறோம் என்றனர் இருவரும். முனிவர் கொலை செய்தவரிடத்தில், நீ சென்று உன்னால் தூக்க முடிந்த அளவு பெரிய கல்லை எங்காவது பார்த்து எடுத்து வந்து இங்கே போட்டுவிடு என்றார். அவர் போய்விட்ட பிறகு, சிறு சிறு பாவங்கள் செய்தவரிடத்தில் ஒரு பெரிய சாக்கினைக் கொடுத்து இது முழுவதிலும் சிறு சிறு கற்களை பொறுக்கிப் போட்டு கொண்டு வா என்றார். அவரும் அந்த சாக்கினை பெற்றுக் கொண்டு சென்று
விட்டார்.

சிறிது நேரம் கழித்து, முதலில் சென்றவர் மிகப் பெரிய கல் ஒன்றினை உருட்டிக் கொண்டும் சிறிது தூரம் தூக்கிக் கொண்டும் கஷ்டப்பட்டு வந்து சேர்ந்தார். அதன் பிறகு இரண்டாம் நபரும் சாக்கு நிறைய கற்களை நிரப்பிக் கொண்டு தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து சேர்ந்தார். முனிவர் கொலை செய்தவனைப் பார்த்து, இந்த கல்லை எங்கிருந்து கொண்டு வந்தாயோ அந்த இடத்திலேயே கொண்டு போய் போட்டு விட்டு வா என்றார். அதற்கு அவர், ஐயா இதனை வெகு தூரத்தில் இருந்து கொண்டு வந்திருக்கிறேன். இவ்வளவு பெரிய கல்லை இங்கே கொண்டு வருவதற்குள் எனக்கு பிராணனே போய்விடும் போல் ஆகிவிட்டது.
இதில் மீண்டும் அங்கேயே கொண்டு போடு என்கிறீர்களே, என்றார். அதற்கு முனிவர், இந்த வேலையை பூர்த்தி செய்தால் தான் நீ செய்த பாவத்தை போக்க முடியும் என்று கூற, அவர் மீண்டும் கஷ்டப்பட்டு அந்த கல்லை உருட்டிக் கொண்டு சென்று விட்டார். இதைப் பார்த்த சிறு சிறு பாவங்கள் செய்தவர் சிரித்தார்.
பிறகு முனிவர் அவரின் பக்கம் திரும்பி, நீ கொண்டு வந்திருக்கும் கற்கள் ஒவ்வொன்றையும் அவற்றை எடுத்த அதே இடத்திலேயே கொண்டு போய் போட்டு விட்டு வா என்றார். அந்த மனிதருக்கு தூக்கி வாரிப் போட்டது. முனிவரே, நீங்கள் கூறியது போல் எவ்வாறு
செய்ய முடியும். இவ்வளவு கற்களும் சிறிது சிறிதானவை. மேலும் அவற்றை எங்கே எடுத்தேன் என எப்படி கண்டுபிடிக்க இயலும். என்னால் முடியாது சுவாமி என்றார்.
தவ யோகி புன்முறுவலுடன் கூறினார், அந்த கொலை செய்த பாவ மனிதன் கூட மனதை மாற்றி புண்ணிய ஆத்மா ஆகிட முடியும். அந்த பெரிய கல்லை மீண்டும் கொண்டு போய் சேர்ப்பது போல. ஆனால் உன்னைப் போல சிறு குற்றங்கள் செய்பவர்கள், சரியாகத் தானே இருக்கிறேன், பெரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லையே என தான் செய்த பாவங்களை இந்த சிறுகற்களின் மூட்டை போன்று சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த பாவங்களைப் போக்க
அவர்கள் இனி சின்ன தவறுகள் கூட செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும். மேலும் பிறருடன் ஒப்பிட்டு பார்க்காமல், கடவுளை மனதால் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பலருக்கும்
நன்மை ஏற்படும் விதமாக புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும். இதைத் தவிர செய்த பாவத்தை போக்க வேறு வழியே இல்லை என்று கூறினார்.
உலகில் பாவங்கள் பெருகி அமைதியின்மை பரவுவதற்கு காரணமே மனிதன் தான் செய்த தவறை பெரிதாக கருதாதது தான். பிறர் மனம் துக்கப்படும் படி கேலி, கிண்டல் செய்தால் அதுவும்
பாவம் தான். இதை உணராவிட்டால் பாவங்களை அழித்து சுகமான வாழ்க்கை வாழ முடியாது.
பாவங்கள் செய்யாமல் இருக்க எளிய உபாயம் :
நாம் பிறர்க்கு துன்பம் தரும் காரியத்தை செய்யும்போது, அதே காரியத்தை பிறர் நமக்குச் செய்தால், நமக்கு எப்படி வேதனை ஏற்படும் என்பதை உணர்ந்தால் பாவம் செய்யத்தோன்றாது.

