பி.கு. வள்ளிமயில், பிரம்மா குமாரிகள், மதுரை
மானிட வர்க்கத்தின் மகத்தான ஆற்றல் ” மனோ சக்தி”. ஆதிகால சித்தர்கள் முதல் இன்றைய அறிவியலார்கள் வரை இன்றளவும் விளக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்று மனம்! மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம். என்று அக்காலத்திலேயே கூறிவிட்டனர். இன்றோ இந்த மனதிற்கு அறிவியல் ஒரு தனி இடத்தையளித்து உளவியல் என பெயர் சூட்டிவிட்டது.
இத்தகைய பலம் மிக்க மனம் சதா சர்வ காலமும் சுற்றிக்கொண்டே இருக்கின்றது. இந்த பழைய துக்கம் நிறைந்த உலகில் மனம் ஏதேனும் ஒன்றை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கின்றது. எனவே மனதின் ஆற்றலை நம்மால் முழுவதும் பயன்படுத்த முடியாமல் போகிறது. எந்த ஒரு செயலும் தொடர்ந்து பயிற்சி செய்வதால் எளிதானதாகிவிடும். மனதை இலேசாக வைக்கும் வாழ்வியல் கல்வி இராஜயோக தியானம். எவ்வளவு கடின சுமையையும் கைகளால் தூக்கிவிடலாம். ஆனால் மனதில் சுமையை சுமப்பது என்பது மிகவும் கடினம். இன்றைய சரீர நோய்களுக்கு பெரும்பான்மையான காரணம் மனரீதியான உடல் பாதிப்புகள்தான். நமது மனதின், எண்ணங்களின் பாவனையை உடல் மூலம் வெளிப்படுத்துகின்றோம்.
யார் மீதும் கோபத்தின் பாவனையை முகம் காட்டுவதற்கு உடலில் அனேக சுரப்பிகள் சுரக்க வேண்டியுள்ளது. ஆனால் கோபப்பட்டவருடன் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நாம் பேசிவிடுவோம். அதே நேரம் உடலுக்குள் சுரந்த சுரப்பிகள் சமநிலை அடைவ தில் அவைகள் உடலை பாதிக்கின்றன இனிவரும் உலகத்தை பணபலத்தாலும், உடல் பலத்தாலும் வெல்ல முடியாது. மனோபலம் ஒன்றே வெற்றி கொடுக்கும். தூக்கத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் மனதை பற்றி நன்கு அறிந்து கொண்டு அதனை வேண்டியபடி பயன்படுத்தவும், மனதிற்கு ஓய்வு அளிக்கவும், புத்துணர்வு பெறச் செய்யவும் ஏற்பட்ட சிரேஷ்டமான வழியே இராஜயோக தியானம். தியான நுட்பவியல் என அழைக்கப்படும் இந்த இராஜயோக பயிற்சியில் மனதை அறியச் செய்து அதற்கு சிறப்பு பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. அனைவரின் மனமும் நேர்மறையான எண்ணங்களை உற்பத்தி செய்யும் சக்தியுடையதுதான். நல்லதை நினைக்க கூடியதுதான் ஆனால் நல்லது என்றால் என்னவென்றே மனதிற்கு தெரியவில்லை என்றால் எப்படி அது நல்லதை நினைக்க முடியும்.
எந்த பொருளை வாங்கினாலும், ஏதேனும் விஷயங்களை அணுகினாலும் ஏதாவது ஒரு அளவீடுகளை பரிமாணங்களை நாம் பயன்படுத்துகின்றோம். அது போல் நல்லதை நினைப்பது என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள வேண்டும்.
மனதினால் உலகத்தை சுற்றுகின்றோம். ஒரு வித உணர்வுகளை பெறுகின்றோம். மூன்று காலத்திற்கும் வினாடியில் சென்று திரும்பும் அற்புத வாகனம் மனம். உறவினர்கள், நண்பர்கள், தாய், தந்தை, சுற்றம், வீடு, காடு, மணல் மேடுகள், பள்ளத்தாக்குகள், இன்று, நேற்று மற்றும் நாளை என மனம் எங்கெங்கோ செல்கிறது. அதனால் என்ன கிடைத்தது..? கிடைக்க போகிறது.
ஆனால் மீண்டும் ஒரு ஆனால், அந்த சுற்றித்திரியும் மனதை கொஞ்சம் நிறுத்தி….
கீழ்கண்டவற்றை கேளுங்கள்
1. நான் யார்?
2. இறைவன் யார்?
3. செய்யும் செயல்களின் பலன் என்ன?
4. அறிவியல் முன்னேற்றம் வானைத் தொட்டாலும் மனதில் அமைதியில்லை ஏன்?
5. ஆன்மீகம் சொல்லும் முக்தி, ஜீவன் முக்தி என்பது என்ன?
இவற்றிற்கெல்லாம் மேலாக அனைத்தையும் அறிந்ததாக நினைக்கும் நமது மனதின் விருப்பத்திற்கேற்ற சுயமாற்றம் ஏற்படவில்லை ஏன்?


