பி .கு உஷா ராணி, மதுரை
நன்றி: Purity Magazine

நமது பூமியில் தண்ணீர் நிறைந்துள்ளது. சுற்றிலும் 71 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மனிதன் உடலில் நீரின் அளவு 60 சதவீதம் உள்ளது. நதிகள், ஏரிகள், பனிக் கட்டிகள் மற்றும் குளம் குட்டைகளிலும் தண்ணீர் உள்ளது. இது தவிர நிலத்தடி நீரும், ஆகாயத்தில் நீர் நிறைந்த மேகங்களும் உண்டு.
நீர் ஆவியாகவும், திரவமாகவும், திடப் பொருளாகவும் இருக்கிறது. நீர் சுவையற்றது, மணமற்றது. நீர் நிறமற்றது என்றாலும் ஒளிக் கதிர்கள் அதன் மீது விழும் போது நீல நிறமாகத் தோன்றலாம். நீரை எந்த பாத்திரத்தில் வைத்தாலும் அதன் வடிவத்தை எடுத்துக் கொள்ளும். நீரில் உள்ள சத்துக்கள் நமது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானவை. நீரின் சிறப்பான குணமே அது திரவமாக இருப்பது தான். திரவமாக இருப்பதால் தான் அதிகமான குளிர் காலத்தில் ஏரிகளிலும் குளங்களிலும் பனிக்கட்டியாக உறைந்து நம்மை குளிரின் தாக்கத்தில் இருந்து காக்கிறது. நீரை எங்கும் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கிறது. அது அனைத்து உயிர்களுக்கும் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. நீருக்கு ஆவியாகும் தன்மை இருப்பதால் தான் வானத்திற்குச் சென்று மேகமாகி மழையாகப் பொழிகிறது. இவ்வாறு கடலில் இருந்து நீர் நிலத்திற்கு வருகிறது.
நம்மை வாழ வைக்கும் தண்ணீரின் சிறப்பான தன்மைகள் நமக்கு நிறைய பாடம் கற்பிக்கின்றது. தண்ணீரைப் போல் நாமும் பலதரப்பட்ட மனிதர்கள், சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு சுலபமாக கடந்து செல்ல வேண்டும். தண்ணீர் போல் பாத்திரத்திற்கு ஏற்ப சீர் திருந்தும் தன்மை இருந்தால் நாம் உறவுகளில் இணக்கமாக இருக்க முடியும். மன அழுத்தம் வராது. தண்ணீர் ஓடிக் கொண்டே இருப்பது போல் நாமும் எங்கேயும் சிக்காமல், நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தால், உணர்ச்சி வசப்படாமல் இருந்தால் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் இழக்காமல் இருக்கலாம். பற்றிலிருந்து விடுபட்டு, எவரையும் தவறாக எடை போடாமல், எதிர்மறை கருத்துக்களை மனதில் பதித்துக் கொள்ளாமல் இருந்தால் நீரோட்டம் போல் போய்க் கொண்டே இருக்கலாம். அப்போது சுலபமாக மறக்கவும் மன்னிக்கவும் முடியும். தண்ணீர் தனக்குள் அனைத்தையும் கரைத்துக் கொள்வதன் மூலம் நமக்கு படிப்பினை கொடுக்கிறது. நமக்குள் நல்ல கருத்துக்களை, அபிப்பிராயங்களை மற்றும் பண்பாடுகளை வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவற்றை கரைத்து விட வேண்டும். அதன் மூலம் கற்றுக் கொள்ளும் தன்மையும் நல்ல உறவு முறையும் அமைந்து முன்னேற முடிகிறது. நமக்குள் இருக்கும் பயம், கவலை மற்றும் ஏமாற்றம் நீங்குகிறது.
தண்ணீர் இயல்பாக குளிந்த தன்மையுடன் இருக்கிறது. அதை சூடேற்றினாலும், சூட்டில் இருந்து எடுத்தவுடன் பழையபடி குளிர்ந்த நிலைக்கு வந்து விடுகிறது. நாமும் எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க வேண்டும். பொறுமையற்ற, நிராகரிக்கப்படுகின்ற சூழல் வந்தாலும் கோபப்படாமல் இருந்தால் அதை எதிர்கொள்ள முடியும். மனம் குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் இருந்தால் கோபம் என்னும் நெருப்பு நம்மை எரிக்காது.
அடுத்த முறை நாம் தண்ணீரைப் பார்க்கும் போது அது நமக்கு கற்றுத் தரும் பாடங்களை நினைவில் கொள்வோமாக!

