பி. கு. தீபா, மதுரை
வாழ்க்கை வாழத்தான்! உங்கள் முன் வரும் காட்சிகளை கண் குளிரக் காணுங்கள், ரசியுங்கள், ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது புளித்துப் போன வாழ்க்கை கூட உங்களுக்கு இனிக்கும். எதிர்கால வாழ்க்கையின் நிகழ்வுகளின் மீது உங்களுக்கு சந்தேகமான
கேள்விகள் எழுந்தால் கிடைப்பது ஏமாற்றமே! கடந்த கால தாக்கத்தில் வாழ்ந்தால் கவலையே! பதிலைத் தேடி அலையாதீர்கள். அது வாழ வாழத்தான் புரியும். நிகழ்காலத்தில் வாழுங்கள். வாழ்க்கையைத் துறப்பதால் பதில் கிடைக்காது. உடனே கிடைத்துவிடும்
பதிலெல்லாம் மூன்று காலத்திற்கும் பொருந்தாது. கேள்விகள் வர வேண்டிய அவசியமில்லாத இடத்தில் எழும் கேள்விகளுக்கு காலம் தான் பதில் அளிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பதிலைத் தேடி அலைவதே வாழ்க்கையானால், வாழ்க்கையே கேள்விக்
குறியாகிவிடும். மக்கள் எதைத் தேடி அலைகின்றார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, அதைப் பயன்படுத்தி சம்பாதித்தவர்கள் தான் ஏராளம்.
உங்களுக்குள் ஒரு வேட்கையிருந்தால் அது உங்களைத் தேடி வரும்! லட்சணங்களை உருவாக்கினால் லட்சியம் தானாக நிறைவடையும். வாழ்க்கைக்கு அத்தியாவசியமான உணவு, உடை, உறைவிடம் போன்ற புறப் பொருட்களை அடைய நினைக்கும் மனிதன்
அகப் பொருளை மறந்து விடுகிறான். அதாவது, மனதின் எண்ணங்கள், பண்புகள், மன ஆரோக்கியம், மனோசக்திகள், காலந்தவறாமை ஆகியவற்றின் அடிப்படையில் தான் வாழ்க்கை உன்னத நிலையை அடைகின்றது. இவற்றில் ஒன்றில்லை என்றாலும் வாழ்க்கையில்
வசந்தம் இருக்காது. கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படி அளப்பார் இறைவன்” என்று கூறிக்கொண்டே சும்மா இருக்க முடியாது. செயல்முறை முயற்சியின்றி இறைவனைப் பலிகடா ஆக்க முடியுமா என்ன?

வாழ்க்கை என்பது உங்கள் கையில் உள்ளது. நமது நிலைக்கும் எண்ணத்திற்கும் அநேக ஒற்றுமை உண்டு. ஆக்கப்பூர்வமான எண்ணங்களே உங்கள் கைகளில் அதிர்ஷ்ட ரேகையாகவும், ஆயுள் ரேகையாகவும் மாறுகின்றன. வாழ்க்கையில் திருப்தி அடைய மன்னிக்க, மறக்கத் தெரிய வேண்டும். மற்றவர்களை மதித்து மரியாதை கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். வம்புக்குப் போகாமல் வாழ்த்தி வாழ வேண்டும். பிறர் மகிழவும் வாழத் தெரிய வேண்டும். பலருக்கு பலன் அளிக்கும் கனியாக வாழ வேண்டும்.
வாழ்க்கை கடலில் செல்லும் படகு போன்றது, அதற்கு எல்லையே இல்லை. அலைகளில் மூழ்கி விளையாடினால் முத்தைக் கொடுக்கும். வாழ்க்கைப் போராட்டத்தில் நீந்தி செல்ல வேண்டும்.
அல்லது மிதக்கத் தெரிந்தாலும் போதும். இறைவனது நினைவிருந்தால் அவரது உதவி உங்களை கரை சேர்த்து விடும்.
அப்படி என்றால் வெற்றிகரமான வாழ்க்கை என்றால் என்னவென்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன்!

