(உலக மகளிர் தினம் – மார்ச் 8)
பி. கு. ஜனனி, மதுரை
பெண் வீட்டின் அஸ்திவாரம். பிறரை முன்னேற்றும் பூஜிக்கப்பட வேண்டிய தேவதை. அலுவலகப்பணி, அடுப்படிப்பணி இரண்டையும் கவனித்தாலும், இதயத்தில் சோர்வு இன்றி சேவை செய்பவள். பெண் இருக்கும் வீட்டில் குடும்ப விளக்கு குவலயத்து விளக்காய் பிரகாசிக்கும்.
தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெண்களை குறிப்பிடும் போது, உயர்பதவியில் இருப்போருக்கு பயன்படுத்தப்படும் “மாண்பு” என்ற சொல்லையே உபயோகித்தார். இந்தியாவில் பெண் தெய்வங்களே அதிகம். நதிகள் பெரும்பாலும் பெண் பெயர்களைக் கொண்டே ஓடுகின்றன.
இதிகாச காலத்துப் பெண்களான பாஞ்சாலி, கண்ணகி போன்றோர் அநீதியை எதிர்த்து நின்று, அதை அழிக்க சபதம் எடுத்து வெற்றியும் பெற்றனர். அப்படி நினைத்ததை முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் பெண்கள். ஆனால் அதே தைரியம், மனோபலம், அவர்களின் ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் சமூகம் அளிக்க வேண்டிய முக்கியத்துவம், மதிப்பு தற்கால சாதாரண பெண்களுக்கு கிடைக்கிறதா என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
பெண்ணின் வாழ்வில் அதிகபட்ச லட்சியமாய் திருமணம் மற்றும் குழந்தைப் பேறு இவற்றை நிர்ணயித்து விடுகிறது இச்சமூகம். அதில் உள்ள சடங்குகளும், சம்பிரதாயங்களும், அதன் பின் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுமே அவளை கூண்டுப் பறவை ஆக்கி விடுகின்றன. தற்சமயம் அனைத்து பெண்களும் ஆணுக்கு நிகராக கல்வி கற்கின்றனர். அனைத்து துறைகளிலும் சாதிக்கின்றனர். அதனால் அவர்களும் சுய காலில் நின்று அவரவர் தனிப்பட்ட தேவைகளையும் பெற்றோர் மற்றும் குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றனர். ஆனால் அவர்களின் ஆழ் மனதின் ஆசைகள் படி நடக்கும் முழுமையான சுதந்திரம் எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.
இதை மாற்ற கல்வியுடன் கூடவே பகுத்தறியும் மற்றும் தீர்மானித்து சுதந்திரமாக சரியான முடிவு எடுக்கும் திறனை பெண் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு போராடி வெற்றி பெறும் ஆற்றல் உள்ளது என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும். வெளி வேலைகள் ஆண் பிள்ளைக்கும், வீட்டு வேலைகள் பெண் பிள்ளைக்கும் என்பது போன்ற பாகுபாடுகளை விடுத்து, இருவரும் சமம் என்ற சிந்தனையையும், அனைத்து வேலையும் இருவரும் பகிர்ந்து செய்ய வேண்டும் என்ற பெருந்தன்மையும் விதைப்பது நமது கடமையாகும்.

பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியாக உள்ள மதிப்பிற்குரிய ஜானகி தாதி அவர்கள், 104 வயதிலும் தளராது இறை சேவை செய்து வருகின்றார். இவ்வியக்கத்தில் பெரும்பாலான கிளை நிலையங்களில் பெண்கள் பொறுப்பாளர்களாகவும், ஆண்கள் அவர்களுக்கு பின்பலமாகவும் இருந்து நிர்வாகம் செய்கின்றனர். இதிலிருந்து பரம்பிதா சிவ பரமாத்மாவால் உருவாக்கப்பட்ட இயக்கத்தில், அவர் பெண்களை மாபெரும் சக்திகளாகவும், உலகை அமைதியாக மாற்ற வழி வகுக்கும் தேவிகளாகவும் பார்த்து, அவர்கள் மீது பொறுப்பு கிரீடம் அணிவித்து, நம்பிக்கையும் வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

