பி . கு . உஷா ராணி, மதுரை
இளைய சமுதாயமே! லட்சியத்தை முதலில் தேடு. “சாதிக்கப் பிறந்தவன் நான்” என்ற மந்திரத்தை அடிக்கடி சொல். குறிக்கோளை அடைய வேண்டும் என்ற தன் முனைப்போடு செயல்படு. “என்னால் முடியும்” என்னும் நம்பிக்கை முழக்கம் உனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். இந்த பண்புகளை வலியுறுத்தும் லட்சிய வீரர் ஒருவரின் வாழ்வில் நடந்ததை பார்ப்போம்.

ரஷ்யாவின் விமானப்படையில் பைலட்டாக பணிபுரிந்தார் ஓர் இளம் வீரர். பன்னாட்டு போர் நடந்ததால் வானில் சர்… சர்… என விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. எந்த எந்த விமானம் எங்கு செல்கிறது என்பது புரியாதபடி போர் மேகம் சூழ்ந்திருந்தது. இளம் விமானி சென்ற விமானம், எதிரி நாட்டினரின் தாக்குதலால் பனி மலையின் அடர்ந்த காட்டில் நொறுங்கி விழுந்தது. விமானம் எரிந்ததில் இளம் வீரரும் கருகி விட்டதாக விமானப் படையினர் முடிவு கட்டினர்.
ஆனால் அவரோ காட்டிலுள்ள மரத்தின் கிளை ஒன்றில் தூக்கி வீசப்பட்டார். அவரது கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. மெல்ல மரத்தை விட்டு கீழே இறங்கியவர், வலியால் துடித்தார். பசியும் வலியும் நரகத்தை அவர் கண் முன்னே கொண்டு வந்தன. தனது கோட் பாக்கெட்டில் இருந்த ரொட்டித் துண்டுகளை சாப்பிட்டு பசியாறினார். பனி மலையின் அடிவாரம் என்பதால் இரவு நேரத்தில் தாங்க முடியாத குளிர் காற்று வீசியது. கனத்த கோட், சூட் அணிந்திருந்தும் கூட குளிரில் உடல் நடுங்கியது. பனியின் குளிர்ச்சி உடம்பை மரத்துப் போகச் செய்ததால் வலியும் மறைந்தது.
மறுநாள் காலையில் மனம் போன போக்கில் பனிச் சரிவில் உருள ஆரம்பித்தார். இப்படியாக 17 நாட்கள் கழிந்தன. ஆனால் எப்படியாவது பிழைப்போம் என்ற நம்பிக்கையை மட்டும் அந்த இளம் வீரர் இழக்கவில்லை.
“நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறை தீர்ப்பு” என்னும் வாக்கு பொய்க்கவில்லை. வெளியில் பனியும் குளிரும் வாட்டினாலும் மனதிற்குள் நம்பிக்கை அவருக்குத் தேவையான உஷ்ணத்தை அளித்தது. பதினெட்டாம் நாள் மக்கள் நடமாடும் சிறு குடியிருப்பு பகுதி கண்ணில் தென்பட்டது. அங்குள்ளவர்கள் அவருக்கு பாலும் ரொட்டியும் கொடுத்தனர். சூடு பறக்க உடம்பை தேய்த்து விட்டனர். மரத்துப் போன உடலில் உணர்ச்சி வரத் தொடங்கியது. மீண்டும் கணுக்கால் வலி தீவிரமானது. தாங்க முடியாமல் மயக்கம் அடைந்த அவரை அங்கு இருந்த மருத்துவர் ஒருவர் இராணுவ மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார்.
காலம் கடந்து விட்டதால் வீரரின் கணுக்காலை குணப்படுத்த முடியவில்லை. செயற்கைக் கால் பொறுத்தினால் நடக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது விடா முயற்சியாலும் பயிற்சியாலும் முன் போலவே செயல்படத் தொடங்கினார். மீண்டும் விமானம் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது. முதலில் விமானப்படை உயர் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆனால் செயற்கைக் காலுடன் பயிற்சி பெற்று மீண்டும் விமானத்தை ஓட்ட ஆரம்பித்தார். அதிகாரிகள் அவரை மீண்டும் பணியில் சேர்த்தனர்.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்”
எனும் குறள் போல உறுதி இருந்தால் எண்ணியது கிடைக்கும் என்பதற்கு இவர் உதாரணம்.

