– பி.கு. வள்ளிமயில், பிரம்மா குமாரிகள், மதுரை
இரயில் நிலையத்தில் நான்கு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். பேசும் விஷயங்களில் சாரம் ஒன்றுமே இல்லை. அர்த்தமற்றதாக இருந்தது. அப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் செல்ல வேண்டிய இரயில் வந்து விட்டது. பேச்சில் மூழ்கியிருந்த நால்வரும் இரயில் வந்ததை கவனிக்கவே இல்லை. அவர்கள் பேச்சில் எந்த உருப்படியான விஷயமும்இல்லை. சிறிது நேரத்தில் இரயில் கிளம்புவதற்கான விசிலும் அடித்துவிட்டது. அப்போதும் கூட நால்வரும் அசையாமல் அதே நிலையில் பேசிக்கொண்டிருந்தனர். வண்டி மெது மெதுவாக நகர ஆரம்பித்தது. அப்போது திடீரென ஒருவருக்கு தூக்கத்தில் இருந்து விழித்தது போல்உணர்வு வந்தது. “ஐயோ வண்டி போகின்றதே” என்று சத்தமாக கத்தினார். ஆனால் அதற்குள் வண்டி சென்று விட்டது. அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்று விடுகிறார்கள். நேரம் என்பது அப்படிப்பட்டது, அது போய் விட்டால் பிறகு பிடிக்க முடியாது. சிலர் எங்காவது நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களிடம்,‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டால் “ஒன்றுமில்லை, just time pass செய்து கொண்டிருக்கிறோம்” என்று சொல்வார்கள்.
எவ்வளவு ஆச்சரியமான விஷயம். ஒவ்வொரு நொடியும் மதிப்பு மிக்கது, வைரத்தைப் போன்றது. உங்களுடைய ஒவ்வொரு அடியிலும் கோடான கோடி வருமானம் இருக்கின்றது. ஒரு நொடியைக் வீணாக்குகிறீர்கள் என்றால் பல கோடி வருமானத்தையும் இழக்கிறீர்கள்.
“நேரம்” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு ஆங்கிலக் கட்டுரையில் “Time is life, wasting time is wasting life”என்று கூறப்பட்டுள்ளது. அதாவது,‘நேரம்தான் வாழ்க்கை. நேரத்தை வீணாக்குவது என்றால் வாழ்க்கையையே வீணாக்குவது’.
மேலும்கூறப்பட்டுள்ளதாவது:
‘If you are taking care of time, time will take care of you,
But if you are not taking care of time, then time also will not take care of you.’
நேரத்தின் மேல் நீங்கள் கவனம் கொடுத்தால் நேரமும் உங்களை கவனித்துக் கொள்ளும். ஆனால் நேரத்தின் மேல் கவனம் கொடுக்கவில்லை எனில் நேரமும் உங்களை கவனித்துக் கொள்ளாது.
‘Those who know the value of time, time makes them valuable’
யார் நேரத்திற்கான மதிப்பை தெரிந்துள்ளாரோ, நேரம் அவரை மதிப்பானவராக ஆக்கிவிடுகின்றது.
உண்மையில் நேரத்தைப் பற்றிய ஞானம் இன்றி, அதை வீணாகவும், அர்த்தமற்ற விஷயங்களிலும் செலவழிப்பவர்கள் ஒருபோதும் வெற்றியாளராக ஆக முடியாது. யார் நேரத்திற்கு மரியாதை தரவில்லை, அவர்களுக்கு நேரமும் மரியாதை கொடுக்காது. யார் நேரத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை நேரமும் கழித்து விடும். நாம் இதிகாச நிகழ்வுகளில் கவனித்தோமேயானால் யார் நேரத்திற்கு மரியாதை கொடுத்துள்ளார்களோ, அதை வீணாக்காமல் சரியான முறையில் உபயோகம் செய்தார்களோ, அவர்களை நேரம் உயர்ந்தவர்களாக ஆக்கிவிட்டது. அவர்களது வாழ்க்கையை சாதாரணநிலையில் இருந்து உயர்ந்த நிலை என்ற வானத்தில் அமர வைத்துவிட்டது. நேரத்திற்கு மரியாதை கொடுப்பவர்கள் உலகமும் மரியாதையுடன் வணங்குவதற்கு பாத்திரமானவர்களாக ஆகிவிடுகின்றார்கள்.
Time Pass or Time Fail?
Time pass செய்து கொண்டிருப்பவர்கள், time-ஐ pass செய்யலாம்.ஆனால் தன்னை fail ஆக்கிக் கொண்டே செல்கிறார்கள். ஒரு மாணவன் ஒரு வருடம் முழுவதும் அங்கே, இங்கே சுற்றித்திரிந்து நேரத்தை வீணாக்கலாம். ஆனால் அவன் பரீட்சையில் தோல்வி அடைந்து விடுவான். அதே போல் நமக்கும் வாழ்க்கை என்பது ஒரு பாடம். நாம் அனைவரும் இந்த பாடத்தை படிக்கக் கூடிய மாணவர்கள். நாம் இந்த வாழ்க்கை என்ற பாடத்தை சரியாக படிக்கவில்லை என்றால்நம்முடைய விலை மதிப்பற்ற பொக்கிஷத்தை இழந்து விடுவோம். அப்போது நாம் வாழ்க்கை என்ற பரிட்சையில் அவசியம் தோல்வி அடைந்து விடுவோம். தோல்வி அடைந்த ஒரு மாணவன் தனது நண்பர்கள், உறவினர்களை சந்திக்க நேரிடும்போது வெட்கத்தினால் ஒளிந்துகொள்வான். வெட்கப்படாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உள்ளுக்குள் வருந்துவார்கள். நான் அந்த நேரத்தில் சுற்றித்திரியாமல் நேரத்தை சரியாக உபயோகித்திருந்தால் நானும் படித்து வெற்றி பெற்றிருப்பேன்,எல்லோரும் என்னை புகழ்ந்திருப்பார்கள் என்று உணருவார்கள். வாழ்க்கை என்ற பரீட்சையில் தோற்றவர்கள் அனைவருடைய பார்வைக்கும் மிக சந்தோஷமாக சுற்றித் திரிவது போன்றும், திருப்தியாகவும், எந்தக் கவலையும் இல்லாதவர்கள் போன்றும் தென்படுவார்கள். ஆனால் உள்ளுக்குள் வலையில் சிக்கிக் கொண்டிருப்பதாக உணர்வார்கள். வாழ்க்கையில் உண்மையான அமைதி மற்றும் சுகத்தின் அனுபவம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை.
சிலர் எப்போதும் அக்கம் பக்கத்து விஷயங்களை பேசிக்கொண்டே இருப்பார்கள். அதில் அர்த்தம் ஒன்றும் இருப்பதில்லை. எப்படி இரண்டோடு, இரண்டு சேர்த்து நான்கால் கழித்துவிட்டால் ஒன்றும் இருக்காது. பூஜ்யம்தான் மிஞ்சுகிறது,நேரமும் கெட்டுப்போகிறது. மேலும் அடைவதும்ஒன்றுமில்லை. அக்கம் பக்கம் பற்றி பேசுபவர்கள் எப்பக்கமும் இருக்கமாட்டார்கள். கடைசியில் பட்சாதாபம் அடைவதை விட வேறொன்றும் கைவரப் போவதில்லை. பட்சாதாபப்பட்டு என்ன செய்வது. வயலில் குருவிகள் காலி செய்த பிறகு. அய்யோ … இப்படி ஆகி விட்டதே …. என தன்னுடைய துரதிர்ஷ்ட பாடல் பாடிக் கொண்டிருப்பர்.
நேரம் சென்று கொண்டிருக்கிறது. நேரம் விலைமதிப்பற்றது. ஒவ்வொரு நொடியும் நமக்கு விலைமதிப்பற்றது. ஒரு நொடியினை மதிப்பிடுவது நமக்கு மிகக் கடினம். நாம் நம்முடைய கவனக் குறைவை விடாமல், தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்தால்,அக்கம்பக்க கதை கூறுவதிலேயே மூழ்கி இருந்தால், அதனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை எண்ணிப் பாருங்கள். ‘இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை’என்ற மந்திரத்தினை நினைவில் கொள்ளுங்கள்.ஒரு நொடி என்பது ஒரு நொடியல்ல,வரக்கூடிய நாளைய காலம். இப்போது ஒரு வேளை வீணாக இழந்துவிட்டால் பிறகு நமது பாக்கியத்தை நினைத்து அழுது கொண்டிருப்போம். நம்முடைய கண் துடைப்பதற்கு கூட யாரும் இருக்கமாட்டார்கள்.


