– பி.கு. குணசுந்தரி, பிரம்மாகுமாரிகள், தூத்துக்குடி
ஒரு மாலைப் பொழுதில் மழை நேரத்தில் வர்ணங்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. மரம், செடி, கொடி, புல் அனைத்திலும் எனது வர்ணம் தான் இருக்கின்றது நான்தான் பெரியவன் என்று பச்சை வர்ணம் சொல்லியது. வானம், கடல் அனைத்தும் நீல வர்ணம் தான் நான் தான் உயர்ந்தவன் என்று நீல வர்ணம் சொன்னது. அனைத்து மனிதன், விலங்குகளுக்குள் ஓடுவது சிவப்பு நிற இரத்தம், எனவே நான் தான் பெரியவன் என்றது சிவப்பு நிறம். இப்படி ஆரஞ்சு, ஊதா அனைத்து வர்ணங்களும் தங்களுடைய பெருமைகளைச் சொல்லி சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அப்போது திடீரென்று பலத்த இடி இடித்தது. வர்ணங்கள் அனைத்தும் பயந்து ஒன்றை ஒன்று கட்டிக் கொண்டன. அப்பொது மேகம் சொன்னது, நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஒன்றாக இருக்கும் போது அழகான வானவில்லாகப் பிறரை மகிழ்ச்சிப் படுத்துபவர்களாக இருக்கின்றீர்கள். எங்கு ஒற்றுமை இருக்கின்றதோ அங்கு அழகும், மகிழ்ச்சியும் இருக்கின்றது.
பழக்கடையில் ஒருவர் வாழைப்பழத்தின் விலையை விசாரிக்கின்றார். தனியாக இருக்கின்ற பழத்தின் விலை ரூ 5 என்றும் சீப்பில் இருக்கும் பழம் ஒன்று ரூ.7 எனவும் சொல்கின்றார். ஒரே வகையான பழம் ஆனால் விலையில் வித்தியாசம். ஏனென்றால் தனியாக இருக்கும் பழத்தை யாரும் விரும்பி வாங்குவது இல்லை. சீப்பாகச் சேர்ந்து இருப்பதையே அதிகம் விரும்பி வாங்குவார்கள் என்கிறார் வியாபாரி. எனவே தனித்திருப்பதைக் காட்டிலும் சேர்ந்திருப்பவைகளுக்கே மதிப்பு அதிகம். நாம் உபயோகப்படுத்தக் கூடிய காலணிகள் கூட ஜோடியாக இருந்தால் மட்டுமே உபயோகப்படும். வண்டிகள் கூட 2, 4, 6 எனச் சேர்ந்திருக்கும் போதுதான் தடையில்லாமல் ஓட முடியும். உதிரியாக இருக்கக் கூடிய மலர்களை தேவி, தேவதைகளின் பாதங்களில் போட்டு அர்ச்சனை செய்கின்றனர். ஆனால் மாலையாகத் தொடுக்கப்பட்ட மலர்களை தேவி, தேவதைகளின் கழுத்தில் அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். நெட்டை, குட்டை என வித்தியாசமாக இருக்கின்ற விரல்கள் ஒன்று சேர்ந்தால்தான் உதிரியாக இருக்கக் கூடிய பூந்தி கூட சுவையான லட்டாக மாறும். எனவே சேர்ந்து ஒற்றுமையாக இருக்கும் போது தான் மரியாதையும் கிடைக்கின்றது. அதனால் தான் பெரியவர்களும் சொல்கின்றார்கள்
ஒற்றுமையே பலம்!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று.
எனவே வேற்றுமையிலும் கூட ஒற்றுமை காண்போம்.



