– பி.கு. குணசுந்தரி, பிரம்மாகுமாரிகள், தூத்துக்குடி
“பொறுத்தார் பூமியாள்வார்” என்பது ஆன்றோர் வாக்கு. அனைத்து நற்குணங்களுக்கும் அடிப்படையானது மற்றும் அத்தியாவசியமானது பொறுமை குணம் ஆகும். “பொறுமை கடலிலும் ஆழமானது”. எனவே எதுவரை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற எல்லை கிடையாது. வாழும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். நான் பொறுத்து, பொறுத்துப் பார்த்தேன் கடைசியில் நானும் இரண்டு வார்த்தை நன்றாகக் கேட்டு விட்டேன் என்கின்றார்கள். அவர்கள் இதுவரை பொறுமையாக இருக்க ஆரம்பிக்கவில்லை என்று தான் அர்த்தம்.
மேலும் சிலர், நானே தான் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? என்று கேட்கின்றனர். பொறுமை என்ற வார்த்தையினை பிரிக்கும் போது பொறு+மை என்று வருகின்றது. ‘மை’ என்றால் ஹிந்தி மொழியில் ‘நான்’ என்று அர்த்தம்.
பொறு+நான்- நான் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
பல்லாயிரம் ஆண்டுகள் பூமிக்கடியில் பல அதிர்வுகளையும், வெப்பத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் நிலக்கரியானது பின்னாளில் வைரமாக மாறுகின்றது. பல அடிகளைத் தாங்குகின்ற கல் தான் அனைவரும் கை எடுத்து வணங்கும் சிலையாகின்றது.
ஒரு ஊரின் எல்லைப் பகுதியில் பாறை ஒன்றின் அருகே ஒரு ரோஜாச் செடி இருந்தது. அந்த ரோஜாச் செடிக்கு மன வருத்தம், நாம் தனியாக ஊரின் கடைசியில் இருக்கின்றோம் என்று. அப்போது பாறை “ நான் உனக்குத் துணையாக இருக்கின்றேன். நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்” என்று கூறியது. தினமும் பாறையும், ரோஜாச் செடியும் தங்களுக்குள் விஷயங்களை பரிமாறிக் கொண்டன. சில நாட்களுக்குப் பிறகு ரோஜாச் செடி பெரியதாக வளர்ந்து பூ பூத்தது. பாறை சொன்னது “ரோஜாச் செடியே நீ பெரியதாக வளர்ந்து விட்டாய், உன்னுடைய பூக்களும் அழகான வர்ணமாக , மணம் நிறைந்ததாக இருக்கின்றன”. உடனே ரோஜாச் செடிக்கு கர்வம் வந்தது. பார் நான் எவ்வளவு அழகாக இருக்கின்றேன் ஆனால் நீ ஜடமாகக் கருப்பாக இருக்கின்றாய் எனக் கேலி பேசியது. பாறை அதை அமைதியாக கேட்டுக் கொண்டு பொறுமையாக இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு ஊரில் உள்ளவர்கள் ரோஜாச் செடியினை பார்ப்பதற்காக வந்தனர். அதன் அழகைப் பாராட்டினர். ரோஜாச் செடிக்கு ஆணவம் அதிகமானது. பாறையைப் பார்த்து மிகவும் கேலி செய்தது ஆனாலும் பாறை அமைதியாக இருந்தது. ஒரு நாள் சிற்பி ஒருவர் அந்த ரோஜாச் செடியினைப் பற்றி கேள்விப்பட்டு அதைப் பார்க்க வந்தார். அப்போது அந்தப் பாறை அவர் கண்ணில் பட்டது. உடனே அதனை ஒரு லட்சுமியின் சிலையாக உருவாக்கினார். சிலையைக் கோவிலிலும் பிரதிஷ்டை செய்தார்.
மேலும் ஏளனம் பேசிய ரோஜாச் செடியின் பூக்களைப் பறித்து தேவியின் காலில் வைத்தார். பொறுமையாக இருந்த பாறை அனைவரும் கை தொழும் தேவியானது. ஏளனம் பேசிய ரோஜா அதனுடைய காலடிக்குச் சென்றது.


