பி.கு. தேவகுமார், மதுரை
மாணவ வாழ்க்கை ஒரு யோகம் (அதிர்ஷ்டம்) நிறைந்த வாழ்க்கை. அதுமட்டுமின்றி தனது பெற்றோர்களால் மற்றும் ஆசிரிய பெருமக்களால் பாரதத்தின் ஆதிபண்பாடுகளை வலியுறுத்தும் கால கட்டம் மாணவ வாழ்க்கை.
இது அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு இறைக் கொடை என்று கூட கூறலாம். இன்றும் அந்தப் பருவத்தை கடந்த வயது வந்தவர்களிடம் கேட்டால், அது ஒரு பொன்னான காலம் என்றும் இராஜயோகம் என்றும், அது திரும்பக் கிடைக்காது என்றும் கூறுவார்கள். மாணவர்கள் மீது தான் நாளைய பண்பாடுகள் நிறைந்த உலகத்தின் கண்கள் உள்ளது. ஏனெனில் அவர்களே அந்த உன்னத புது உலகின் தூண்கள். பள்ளிப்பருவத்தில், ஒரு மாணவன் எதை பார்க்கின்றானோ, எதை உள்வாங்குகின்றானோ, எப்படிப்பட்ட விசயங்களை பற்றிக் கேட்கின்றானோ அதுவே அவனது வாழ்க்கையாகின்றது. அது நல்லவையாகவோ தீயவையாகவோ இருக்கலாம், இதற்கு ஒரு வரையறை கிடையாது. அப்படிப்பட்ட அந்த மாணவ பருவத்தில் இருப்பவர்களுக்கும் அந்தப் பருவத்தை பக்குவமாக ஆக்குபவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் இந்த யோகதினம் (#Yogaday #International_day_of_yoga) ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்.
யோகமுறைப் பண்பாட்டிற்கு இன்று அனைத்துத் தரப்பினர்களிடமிருந்து நல்ல வரவேற்பு ஏற்பட்டிருப்பது என்பது பெருமைப்படத் தக்கது. அனைவருக்கும் மிகத் தேவையான ஒன்று என்று கூட சொல்லலாம். எனினும், பண்பாடுகள் வளரும் இடம் பாடசாலையே என்று சொல்வதைக் காட்டிலும் பிறக்கும் இடம் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அனைத்துத் தரப்பினருக்கும் அவசியம்; எனினும், அதிக அவசியம் என்றால் கல்வத் துறை தான். கல்வி ஒரு மனிதனை அறிவுஜீவியாக ஆக்குகின்றது. பல கருத்துகளை அறிந்த நிலைக்குப் பெயர் அறிவு. அறிந்து கொள்வதோடு மட்டுமின்றி அந்தக் கருத்துகளை புரிந்து, ஏற்றுக் கொண்டு நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வரும் பொழுது தான் அந்த கருத்துகள் ஞான நிலையைக் கடக்கின்றது.
அந்த ஞானம் எப்பொழுது உணர்வாகின்றதோ அப்பொழுது தான் அது விவேகத்தின் நிலையை அடைகின்றது. இவையனைத்தும் மாணவப்பருவத்திலிருந்தே துவங்கவேண்டும். அதற்குத் தான் பண்பாடுகளை வழியுறுத்தும் யோக முறைக் கல்விகளை ஒரு மனிதனுக்கு ஆரம்பநிலையிலேயே வழங்க வேண்டும் என்பது மிக முக்கியம். வளரும் பருவத்தில் தான் ஒன்றைக் கற்றுக் கொடுப்பதும், கற்றுக் கொள்வதும் அவசியம். சிலர் என்னால் முடிந்தால் நான் ஏன் இதைச் செய்யமாட்டேன் என்று கூறுகின்றேன் என்பார்கள், காலம் தவறினால் புத்திசாலியும் முட்டாளாவான். காலத்தில் ஒன்றைக் கற்றுக் கொள்பவன் முட்டாளாக இருந்தானாலும் அவன் புத்திசாலியாவான். அது தான் மாணவப் பருவம். ஒரு மாணவன் தனது பள்ளிப் பருவத்தை முடித்துவிட்டு மிகப்பெரிய பதவியை அடைந்த பிறகு ஒரு நாள் தனது கிராமத்தில் உள்ள தனது ஆசிரியரைச் சந்தித்தார். நீங்கள் நான் இந்த நிலைக்கு நான் உயரக் காரணம் என்று கூறினார். ஆசிரியர் பதிலுக்கு, நான் எத்தனையோ மாணவர்களை உருவாக்கியுள்ளேன் என்று எனக்கு நல்லாசிரியர், ஜனாதிபதி விருது கிடைத்தது. அப்பொழுது உன் நினைவு தான் எனக்கு வரும் என்றார். ஏனெனில் உனக்கு கற்றுத் தர நான் எடுத்து முயற்சியின் பலன் தான் அடுத்த வந்த அனைத்து மாணவர்களுக்கும் கிடைத்தது. அதற்குக் காரணம் நீதானே என்றார். மாணவர்களின் தனிப்பட்ட முயற்சி மட்டுமல்ல, ஆசிரியரும் முயற்சிக்கவேண்டும். ஒரு மாணவனுக்கு மட்டும் பள்ளிப்பருவம் அல்ல, ஆசிரியரும் ஒரு மாணவரானால் தான் ஒரு நல்ல மாணவனை உருவாக்கமுடியும். இருவருக்குமே பண்புகள் நிறைந்த யோகமுறைகள் மிக அவசியமாகும்.
மாணவப் பருவத்தில் ஒருவர் தன்னைத் தான் ஆளும் உடல் பலம், மனபலத்தை முழுமையாகப் பெற்றிருப்பார். அந்த பருவத்தில் இராஜாபோன்று வாழ்கின்றான். தன்னை அறிந்து கொள்வது தான் தன்னை உணர்வதாகும். இதுவே இராஜயோகத்தின் முதல் படியாகும். ஒருவர் தனது சக்திகளையும் தனது கலைகளையும் உணருவதே இராஜயோக தியானமாகும். 
தன்னை அடையாளம் காட்டுவது கல்வி. யோகக் கலை அங்கேயே அரம்பமாகிவிடுகின்றது. பண்புக் கல்வியும் அரங்கேறுகின்றது. எனினும் தன்னை அறிவது என்பது மிகப் பெரிய பாடமாகும். எந்தப்பாடத்தை கற்றுத் கொள்கின்றோமோ இல்லையோ முதலில் கற்க வேண்டிய பாடம் தன்னைப் பற்றிய ஆரம்பப் பாடமாகும். அதற்கான இடம் ஆரம்பக்கல்விச்சாலைதான் என்பதில் ஐயமில்லை. உண்மையில் இன்றிருக்கும் பாடமுறைகள் எவற்றிலும் இந்தப்பாடம் இல்லை. பாரதத்தின் ஆதிபண்பாடுகளில் யோகமுறைதான் கல்வியே தவிர இன்றைய பாடமுறைகளே கிடையாது. வயதுக்கேற்ற பாடமுறை என்பதே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமுறையாகும். ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்திருக்கும் கலைகளுக்கு அளவே இல்லை. அதற்கு எந்தப் பாடமுறையை வகுக்கமுடியும். ஆதியில், ஒரு மாணவன் எதை எப்படி வெளிப்படுத்துகின்றாரோ அப்படி அந்த மாணவனுக்கு வழிமுறைகள் ஆசிரியர்களால் கூறப்பட்டது. அந்த அந்த மாணவனுக்கான கலையின் அடிப்படையில் அவனை அவனே செதுக்கிக் கொள்ள வகை செய்வது தான் ஆசிரிய பெருமக்களின் வேலையாக இருந்தது. பாடமுறைகள் கிடையாது, அதுதான் நமது ஆதிபண்பாடுகள் நிறைந்த யோகமுறைகள். எங்கு ஒரு வரையறுக்கப்பட்ட பாடமுறை இருக்குமோ அங்கு கலைகள் அழிக்கப்படுகின்றன, அமுக்கப்படுகின்றன. இன்றைய மாணவர்களின் நிலையை பார்க்கும் பொழுது இரத்தக்கண்ணீர் தான் வடிக்கவேண்டியது வருகின்றது. குண்டுச் சட்டியில் குதிரையோட்டும் கதையாகிவிட்டது. ஒரு குறிப்பிட்ட பாடமுறையைப் படித்து அதில் வரும் வினாக்களுக்கு பதில் எழுதினால் மதிப்பெண் கொடுத்துவிடுகின்றனர். ஏற்கெனவே இருக்கும் ஒன்றை அப்படியே எழுதியதற்கு மதிப்பெண்ணா? நமது பாரம்பரிய பண்பாட்டுக் கல்வியில் அப்படி நிலையெல்லாம் கிடையாது, புதுமைக்கு தான் முதலிடம். இன்றும் சில மாணவர்கள் இந்தப் பரிச்சையில் தோல்வியடைகின்றார்கள் என்றால் இதை எங்கே போய் கூறுவது? நமது யோகமுறை பாடமுறையில் தோல்வி என்பதே கிடையாது. வெற்றி என்பது வெகுமானம் இல்லை. அது நாம் ஆற்றவேண்டிய கடமை, இதில் என்ன மமதை? தோல்வி என்றால் அவமானமில்லை, அது நமது மடமை. யோகமுறைகல்வி அதை மாற்றி அதிலிருந்து மற்றோரு பாடத்தைக் கற்றுக்கொள்ள மனபலமாக வழங்குகின்றது. இன்று ஒருவன் தோல்வி அடைந்துவிட்டால் அவனைத் தூற்றி தற்கொலை வரை செல்ல வைத்துவிடுகின்றனர் என்றால் நமது பண்பாடு எப்படி சீர்குலைந்து நிற்கின்றது என்று பார்த்துக்கொள்ளுங்கள். இன்றைய கல்விமுறை வாழ்க்கைக் கல்வியாகுமா? யோகமுறைக் கல்விதான் பண்பாடுகளை வளர்க்கும் வாழ்க்கைக் கல்வியாகும்.
இரண்டாவது விசயம் என்னவெனில், தான் தனது சக்திகளை அறிந்து கொண்டாலே தனக்கு எங்கிருந்து இவைகள் கிடைத்தது என்பது புலப்பட்டுவிடும். உலகம் மற்றும் உலகை இயக்கும் மாபெறும் சக்தி அதாவது இறைசக்தி என்பதும் தெளிவாகும். இன்றைய உலகில் பிரச்சனைகளுக்கான முக்கிய காரணமே மாணவர்கள் என்ற கருத்து நிலவுகின்றது. அவர்களை மையமாக வைத்து ஒரு சராசரி குடும்பத்தை எடுத்துக் கொண்டாலே எத்தனை எத்தனை தேவைகள் உள்ளன. அதற்கு எத்தனை ஏற்பாடுகளை அந்தக் குடும்பம் செய்யவேண்டியது உள்ளது. இந்த பிரச்சனைகளை எல்லாம் தவிர்க்க ஒரே வழிதான் உள்ளது. அது யாதெனில் மாணவர்களிடம் உள்ள மிக உன்னத சக்திகளை சரியாக பயன்படுத்துவதாகும். தவறியதால் தான் இந்த நிலைமை என்பது நாம் அறிந்த உண்மை. ஒரு வீடு மட்டுமின்றி உலகமே அடுத்து வளர்ந்து வரும் மாணவ சமுதாயத்தை நம்பியுள்ளது கண்கூடான உண்மை. இங்கு தான் இறை சக்தியின் மீதான நம்பிக்கை மிக அவசியமாகும். அந்தப்பிரதான சக்தியில் தான் எத்தனை பிளவுகள் மற்றும் பிரிவுகள், அது அடித்தளத்தையே அல்லவா அசைத்துக் கொண்டிருக்கின்றது! இப்படியிருக்க, நமது பாரதப் பாரம்பரியம் எப்படி வாழ்வாங்கு வாழும்? வழியேயில்லை என்பது போல் ஆகிவிட்டது! நாம் அனைவரும் அந்த இறைச் சக்தியின் குழந்தைகள் என்ற உணர்வு ஒன்று தான் நம்மை ஒன்றுபடுத்தும். நாடு, ஜாதி, மதம், இனம் மற்றும் நிறம் என்று எப்படி பிளவு பட்டிருந்தாலும் ஒன்றாக இணைக்கும் வல்லமை சகோதர உணர்வினால் முடியும். அதை இராஜயோக தியானக் கல்வி கற்றுத்தருகின்றது.
உடல் தந்தை தனக்கு மட்டும்தான். தன் உயிர் தந்தை(ஆத்மதந்தை) அனைவருக்கும் தந்தையாவார்.
உடல் தந்தையை நினைப்பது போன்று உயிர்த் தந்தையான இறைவனை (பரமாத்மா) நினைப்பது தான் இராஜயோக தியானமாகும். யோகம் என்பதன் பொருள் “மானசீக தொடர்பாகும்”. மனத்தெளிவு பெற்றவர் மாணவர்கள், அவர்களால் தான் மானசீக இணைப்பை எளிதாக இறைவனிடம் ஏற்படுத்திபல பலன்களை எளிமையாகப் பெறமுடியும்.
தியான முறைகளைக் கண்டு பயம் கொள்வது இன்று இயல்பாகிவிட்டது. காரணம் அதற்குமனக்கட்டுப்பாடு, பொறுமை இவை மிகவும் அவசியம் என்ற கருத்துக்கள் நிலவுகின்றது. இவையனைத்தும்மாணவப் பருவத்தில் இயற்கையாக இயல்பாக இருக்கும். சிறிது கவனம் கொடுத்தாலே இந்த இராஜயோகக்கலையைக் கற்றுக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. கடினமின்றி, தனது இயற்கை நிலையில் நாம்இருப்பதுதான் இராஜயோகக் கலையாகும். இயல்பை மீறிச் செயல்படுவது தான் மிகக் கடினம்.இக்கலைக்கு எளியமுறை இராஜயோகம் என்றும் பெயர் உண்டு. பலவந்தமாக தன் மனதை அடக்கிச்செய்வதல்ல இராஜயோகம்.
பண்பாடுகலந்த யோகமுறைக் கல்விகள் மாணவர்களிடம் இலட்சியம் கலந்த இலக்குகளை நிர்ணயம்செய்யவைக்கின்றது. இன்றெல்லாம் சூழ்நிலைக்கு ஏற்ப இலட்சியங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒருநாடு தனது பொருளாதாரத்திற்கு எதை நம்பியுள்ளதோ அதைச் சார்ந்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகிடைக்கும் என்ற நோக்கில் இலட்சியத்தை நிர்ணயிக்க ஆசிரியர்களும் பெற்றோர்களும்ஊக்கப்படுத்துகின்றார்கள். காலம், ஆட்சி. சிந்தனை, நிலைகள், சூழ்நிலைகள் மற்றும் வாய்ப்பு-வசதிகள்மாறும் பொழுது அனைத்து இலட்சியக் கனவும், பொடிப் பொடியாகிவிடுகின்றது. ஒரு காலகட்டத்தில்பொறியியல் கல்விக்கு இருந்த மதிப்பு இப்பொழுது இல்லை. என் ஆசிரியர் அல்லது என் பெற்றோர்கள்கூறியதால் தான் இந்த பாடத்தை தேர்ந்தெடுத்தேன் என்று கூறிக் கொண்டு கஷ்டப்படுபவர்கள் ஏராளம்.ஆனால் யோகமுறைக் கல்வியால், மனபலம் கொண்ட மாணவன் எச்சூழ்நிலையிலும்
தனது தனித் தன்மையை நம்பிக்கையுடன் நிலைநாட்டுவார். இதற்கு இராஜயோகம் உடல் சார்ந்தஇலக்கின் கூடவே ஒழுக்க மேம்பாட்டையும் கற்றுத் தருகின்றது. அதிகாலையில் எழுந்து தியானம் செய்தல்என்பதை வலியுறுத்துகின்றது. இதன் மூலம் மன உறுதி தானாக வளர்கின்றது. தன்னை உணரும்தியானப்படிகளை கடந்து செல்வதால் தன்னம்பிக்கை தன்வயப்படுகின்றது. தான் எடுத்த லட்சியங்கள்இலட்சணங்களாக மாற ஆரம்பிக்கின்றது. பண்பாடுகள் நிறைந்த இராஜயோக சாதனையில்ஆக்கப்பூர்வமான சிந்தனைகளே ஆதாரமானது. மனத்தெளிவு மன உறுதியை அளிக்கின்றது. சுத்தமானஎண்ணங்கள் எளிதில் கைகூடுகின்றது. ஒரே எண்ணங்களை மனம் அசைபோட விரும்புவதில்லை, மாறாக ஒவ்வொரு அடியிலும் புதுமையே விரும்புகின்றது. உங்கள் புதுமையை பறிக்கும் எந்தப் பழக்கத்தைபலிக்கவேண்டும். விதிகள் மற்றும் நியமங்கள் உங்கள் கலைகளைக் தளைக்கச் செய்யவேண்டுமே தவிரகலைக்கக்கூடாது. விதிகளும் நியமங்களும் நமது சுதந்திரத்தை அடக்கியாண்டல், அது உண்மையானயோகமுறையல்ல. அனைத்தையும் துறப்பதல்ல இராஜயோகம், பறந்த உள்ளத்துடன் உயர்ந்த ஆனந்த அனுபவத்தை அடைவது தான் இராஜயோகம். அடக்குவதல்ல இராஜயோகம், அடங்கிக்கிடக்கும்ஆத்மாவின் அளப்பறிய சக்திகளை அகிலத்திற்கு அளிப்பது தான் இராஜயோக முறையாகும். மனம் எதைவிரும்புகின்றதோ அதைத்தான் நாடிச் செல்லும். திரைப்படம் பார்க்காதே, அதைச் செய்யாதே என்றுமாணவர்களை கட்டுப்படுத்துவது என்னவோ சரிதான். நீங்கள் கூறும் அறிவுரைகள் அவர்களின் மனஆற்றலை சிதைத்துவிடாவண்ணம் இருக்கவேண்டியது மிக அவசியம். மற்றவர்கள் விரும்பும் நிலையை எல்லாம் ஒருவர் அடையமுடியும் என்பது சாத்தியமே இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள கலைகளின்அடிப்படையில் அவர்களின் திறமைகள் வெளிப்படும். இதைத்தான் இராஜயோகமுறை கற்றுத்தருகின்றது. உங்கள் மகனுக்கு எதைச் சொல்லிக் கொடுத்தாலும் வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்றுகூறி, இவனுக்கு இந்தப் பாடமெல்லாம் மண்டையில் ஏறாது என்று பட்டம் கட்டப்பட்டவர்கள் விண்வெளி ஆராய்ச்சியில் முதன்மையானவராக திகழ்ந்தவுடன் இவன் என் மாணவன் என்றோ அல்லது எனது மகன்என்றோ கூறுவது வழக்கமாகிவிட்டது. மன ஒருமைப்பாடு, மனக் கட்டுப்பாடு என்றெல்லாம் கூறி ஒருவன்லயித்துக் கொண்டிருக்கும் நாளைய உலகச் சிந்தனையில் ஒரு கல்லை எறிந்து கலைத்து விடக்கூடாது.இராஜயோக தியானத்தில் சாசுவதமான எண்ணங்களில் நிலைத்திருக்க பயிற்சி அளிக்கப்படுகின்றது. தேவையற்ற எண்ணங்களில் இருந்து தானாக விலகிவிடுவதால் ஒருமுகப்பாடு எளிதாக அமைகின்றது.
எடுத்த எந்த லட்சியத்தையும் அடைவது என்பது வெற்றிகரமான மாணவ வாழ்க்கையாகும்.
இராஜயோகமுறை உங்களுக்குப் பல வழிகளைக் கற்றுத்தருகின்றது. முதலில்
1) ஒரு லட்சியத்தின் மீதுஇலக்கை நிலைநிறுத்தக் கற்றுத்தருகின்றது
2) இதிலிருந்து வேறு எந்தப் பக்கமும் மனம்சென்றுவிடாவண்ணம் பக்குவமான விசயங்களை மனதிற்குள் வைக்கசெய்கின்றது (Stand where you are).
3) திரும்பத்திரும்ப அந்த இலட்சியத்தை மனதில் அசை போட பல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது (Reproduce, Repeat).
4) அது கிடைக்கும் என்ற நம்பிக்கையை (Faith) மனதில் பதிக்கும் பாடத்தில், அடிப்படை ஞானவகுப்பிலிருந்தே கவனம் கொடுக்க வைக்கப்படுகின்றது.
5) எடுத்த இலட்சியம் நிறைவேறிவிட்டதாகவேதன்னைப்பார்க்கும் (visualisation) வண்ணம் தினமும் தியான வார்ணணைகள் வழங்கப்படுகின்றன.
6) யாருடன் பேசிப்பழகினாலும், தான் கொண்ட லட்சியத்தைப் பற்றி வெளிப்படையாக பேசவும், தன்னைஅதை அடைந்த ஒருவராக காட்டிக் கொள்ளும் அளவிற்கு உள்ளுணர்வாக ( Realisation ) ஆக்கப்படுகின்றது. அதாவது இவர் இதை அடைந்துவிட்டார் என்ற தோன்றும் அளவிற்கு அந்த உள்ளுணர்வு விரிவடையச்செய்யப்படுகின்றது. அது வெளிப்பகட்டாக இல்லாமல் ஆக்கப்பூர்வமாக செயல்படுகின்றது. ஏனெனில் எதை நீங்கள் உலகிற்கு காட்டுகின்றீர்களோ அதை இந்த உலகம் உங்களுக்குக் கொண்டு வந்து தரும்என்பது நியதி. நம் ஒருவரின் எண்ணத்திற்கே அதிக சக்தி இருக்கும்போது, மற்றவர்களின் எண்ணங்களையும் உங்கள் இலட்சியத்தை நோக்கி வளைத்துப் போட்டுவிட்டால் அதைவிட எளிதானவிசயம் வேறு எதுவுமில்லை. அது உங்களை வந்து தானாக சேரும். இந்த விதியைக் கையாளும்கலைகளையும் ஆரம்பத்திலேயே கற்றுத்தரப்படுகின்றது.
7) பொறாமை கொள்வது எந்த பிரிவிலும், இல்லாமல் இல்லை. அந்த வெறுப்பான உள்ளுணர்வு நமக்கே தெரியாமல், இவ்வளவு காலம் நாம் உழைத்த உழைப்பை தின்றுவிடுகின்றது. பொறாமை என்ற தீயகுணம், மாணவன், கற்ற அனைத்து வித்தைகளைக்காணடிக்கக் காத்திருக்கின்றது. விதிப்படி யாருக்கு என்ன கிடைக்கும் என்பது எழுதப்படாத உண்மை என்பதை இராஜயோகம் போதிப்பதால் இந்த கொடுந்தீயிலிருந்து எளிதாக விடுபட வழிகிடைக்கின்றது.
ஒவ்வொருவருக்குள்ளும் திறமையிருப்பின் பொறுமை (Patience) காத்தருளுங்கள். பொறாமை என்பது எதற்கு உங்களுக்குள் உள்ள வெற்றி கனி உங்களுக்கே என்று உணரும் கலை இந்த இராஜயோகம் கற்றுத்தருகின்றது.

