பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை
பார்போற்றும் நம் பாரத அன்னையர்கள் #காடு வெட்டி, கஞ்சிக்கலையமிட்டு, கரை சேர்த்தவர்கள், காளையர் புகழ்காத்தவர்கள். முதல் மரியாதையாக வந்தே மாதரம் எனப் புகழ் பாடும் பூவையர்கள். அ முதல் ஃ வரை தாயே நீயின்றி இவ்வுலகில் ஒரு அணுவும், உயிர்சக்தி பெற முடியாது. தாயில்லாமல் யாருமில்லை. அன்னையே அனைத்திற்கும் ஆரம்பம். ஆரம்பமே அலைக்கழிக்கப்பட்டால், அலைகடல் தாங்கி நிற்கும் இவ்வுலகில் அமைதி அமைவது ஆச்சரியமான விசயமாகிவிடும்.
நம் பண்டைய பாரத பூமியில் மதிப்பும் மரியாதையும் பெண்களுக்கு மிகச் சிறந்து விளங்கிய காலத்தில், பஞ்சம் #பட்டினியில்லை, பாவம் #சாபமில்லை, தாகம்# தவிப்பில்லை. இப்பொழுது உலகெங்கிலும் பிரச்சனைகள், சண்டை #சச்சரவுகள் சரளமாக கொழுந்து விட்டு எரிகின்றதே ஏன்? ஒரு கோழி தனது குஞ்சுகளை காப்பது போல் இவ்வுலகத்தையே மத இனவேறுபாடின்றி காத்தவர்கள் நம் குலப்பெண்கள். இன்றோ, ஆவதும் பெண்ணாலே என்றிருந்த பொன்னான மதிப்பு அழிவதும் பெண்ணாலே என்றாகிவிட்டது.
தமிழில் சிறப்பான வார்த்தையே அம்மா, தாயே. தாய் என்றாலே தன்னுயிர் தந்து, தான் உயிர் காப்பவள், வழங்கும் வள்ளல். உலகையே ஆளும் அன்புக்கடலான இறைவனையே தன்னுடல் தந்து ஆளுபவர் அன்னை. நல்லவர் உள்ளம் இறைவன் இல்லம் என்று கூறுவார்கள். உண்மையில் பண்புள்ளம் கொண்ட பெண்கள் உள்ளத்தில் இறைவன் குடிகொண்டியிருப்பார் என்று அர்த்தம். ஆகையினால் தான் சிவசக்திகள் இல்லை என்றால் சிவமில்லை என்கின்றார்கள் போலும். அன்பே சிவமானவரை காண அன்பின் உருவமான அன்னையரையே போற்றுங்கள் (வந்தே மாதரம்)
தவத்தைக் கலைத்த கொக்கு ஒன்றை, தனது தவப் பலனாக ஒரு பார்வையால் எரித்து விட்டு, பசியார நகர்வழி வந்த கொங்கணமுனிவர் வாசுகி அம்மையார் வீட்டின் முன் யாசிக்கச் சென்றார். திருவள்ளுவருக்கு உபசரணை செய்து கொண்டிருந்த பதிவிரதையான, பத்தினியான அம்மையார், முனிவருக்கு வந்து பிச்சை வழங்கக் காலதாமதம் ஆகியதைக் கண்டு சினம் கொண்ட முனிவர், அவரையும் தன் பார்வையால் எரிக்க நினைத்தபோது, “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணரே“ என்று தனது பதிவிரத சக்தியினால் கிடைக்கப்பெற்ற ஞானப்பார்வையினால் கண்டறிந்து கூறினார். இப்படி ஒன்றெல்ல இரண்டல்ல நம் பாரத அன்னையர்களின் கதைகளை கேட்க, காலமே போதாதோ!

ஒரு கன்னிப்பெண் அனைத்து ஆபரணங்களும் அணிந்து கொண்டு, எந்தஒரு துணையுமின்றி. நல்இரவில் தன்னந்தனியாக பாதுகாப்பாக வீடு திரும்பும் காலம் என்றைக்கோ அன்றே இவ்வுலகில் உண்மையான இராமராஜ்ஜியம் என்று பாரத தேசத்தந்தை காந்தியடிகளார் கூறுகின்றாரே என்ன காரணம்? ஏன் ஒரு ஆண்மகனை மையமாகக் கொண்டு கூறவில்லை, அவர்களுக்குப் பாதுகாப்பு அவசியமில்லையா? பெண்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் பொக்கிஷங்கள். பெண் தன்மையை பானமாகப் பார்க்காது, பண்பின் உருவமாகக் கண்டால் பாரதம் (உலகம்) பொன்னுலமாக மாறும். மனையடி சாஸ்திரத்திலே, பெண் பகுதி உயருமாயின் அங்கு வசிப்பவர்கள் அனைவரும் உயர்வார்கள், அவரைச் சார்ந்தவர்களும் உயர்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பகைமையைப் பாராட்டாது, பலருக்குப் பாங்காக பண்பின் பாலமாகுங்கள். பண்பின் உரைவிடமாகி, வம்பை விளையாட்டாகவும், விலைக்கு வாங்காமல் அன்பின் விலையை உணர்த்துங்கள். பெண்பித்தர்கள் அனைவரும் பெண்களின் அடிப்படை பொற்பண்புகளை பார்க்காது சீரழிந்தவர்களே! ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் பங்கு, பொருளாரத்தில் மட்டுமல்ல, பெண்களின் முன்னேற்றத்திலும் உள்ளது. இன்றளவும் எந்தக் குடும்பத்தில் பெண்கள் மதிப்பும் மரியாதையுடனும் நடத்தப்படுகின்றார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகின்றதோ, குறிப்பாக வருமானத்தைப் பெண்களிடம் கொடுத்துப் பயன்படுத்தப்படுகின்றதோ அக்குடும்பம் கோயிலாக செழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. குடும்பத்தைக் கட்டிக்காக்கும் கோயிலானாலும், பெண்மணிகள் நாட்டின் பொன்மணிகள்.
கற்புக்கரசி கண்ணகி, ஜாம்பவான்களை வீழ்த்திய ஜான்சி ராணி, ஆழ்ந்த கருணைக்கு அன்னை தெரசா, கைவிளக்கேந்திய காரிகையான அன்னிபெசண்ட் அம்மையார் போன்ற பலரைப் பார்த்துள்ளது நம்பாரதம். பெண்கள் வெறும் ”Pen” அல்ல, அவர்கள், ஆடவர்களின் பயன்படுத்தும் வெறும் ”Pen” அல்ல. அவர்கள் ஆண்களின் பாக்கியத்தை பார்போற்றவைக்கும் ”Pen” கள். புதுவுலகை வரையும் ”Pen” ”கள்.
பெண்களே! கொழுந்துவிட்டு எரியும் கோபத்தை கொளுத்தும் பணிவின் பதுமைகள் நீங்கள். பெண்களின் பலமும், பலகீனமும் பரிவுதான். பலத்தைப் பண்போடு பயன்படுத்துங்கள், பலகீனத்தைப் பாங்கோடு பாழாக்குங்கள், பால்போன்று பண்பாக்குங்கள். பழையதற்கு விடை கொடுங்கள். அது உங்களை விண்ணிற்கு இட்டுச் செல்லும், அங்க அலங்காரம் அகங்காரத்தை அழைத்திடும், ஆத்ம அலங்காரம் உங்களை ஆலயமாக ஆக்கிடும். குறிப்பாகப் பூவையர் உங்கள் புகழே புன்னகை. எப்பொழுதும் மகிழ்ச்சியே மங்கையர் உங்கள் மகிமை. பெண்களைப் புண்ணாக்கும் மடமையை மண்ணாக்குவது (அழிப்பது) உங்கள் கடமை.
அனைத்துச் சாஸ்திரத்திற்கும் தாயானது பகவத் கீதை என்பார்கள். ஏன்? தாய்போன்று சாஸ்திரம் நம்மைப் பாதுகாக்கும், நல்வழிப் படுத்தி வளர்க்கும் என்பார்கள். பாண்டவர்களுக்கு மட்டும் கீதையா? நம் அனைவருக்கும் கீதை கிடையாதா? பெண்களின் குணாதிசயங்களையே அழகாகக் கருப்பொருளாக கொண்டு சித்திரிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. இன்று பெண்கள் மானத்தை சகுனித்தனம், நயவஞ்கத்தனம், தேவையற்ற வீணான விளையாட்டில் விற்கப்பட்டுக்கொண்டுள்ளது. அங்கு சகுனியின் சூதாட்டத்தில் பாண்டவர்கள் திரௌபதி என்ற பெண்ணை மட்டும் இழக்கவில்லை, தனது பெண் குணாதிசயங்களை இழக்கின்றார்கள். அதை மீட்டுத்தந்த புகழ் இறைவனைச் சாரும். தர்மத்தை (யுதிஸ்டர்#தர்மன்) காப்பவள் தாய், வீரத்தை (பீமன்) விதைக்கும் வீரத்தாய், அன்பால் (அர்ஜுனன்) அரவணைக்கும் அன்னை, குணநலத்தை (நகுலன்#நகல்) மற்றவர்களுக்கு மாற்றும் மங்கை, சகயோகமே (சகாதேவன்) தனது வாழ்க்கையாகக் கொண்டு வாழும் சாகத்தியதேவியர்கள் பெண்களே என்பதன் அடையாளமாகவே ஐந்து குணஅம்சங்களாக பாண்டவர்கள் காட்டப்பட்டுள்ளனர். 750கோடி மானிடர்களில் இந்தக் குணாதிசயங்களில் (5 சதவீகிதம்) எதையாவது பெற்றிருந்தால். தனது வாழ்க்கை என்ற போராட்டத்தில் இறையுதவியுடன் வெற்றியைத் தனது பிறப்புரிமையாக பெறமுடியும்.
உலகிலேயே முதன் முறையாக ஒரு கால் இல்லாமல் உயர்ந்ததிலும் உயர்ந்த மலை உச்சியை(எவரெஸ்ட்) அடைந்தவர் என்ற பெருமை ஒரு இந்தியப் பெண்மணிக்கு(அர்னிமா சின்கா) கிட்டியுள்ளது. நம்மிடம் இருக்கும் குறைகளைப் பற்றி யோசிக்காமல், அந்தக் குறையையும் தாண்டி ஒரு இலக்கைக் கணித்து முயற்சி செய்து அடைந்து விட்டால், அந்தக் குறையின் கறையைக் கூட கழுவி விடமுடியும். குறையில்லாத மனிதன் இவ்வுலகிலேயே ஏங்குமில்லை. குறையை நிறையாக மாற்றக் கிடைக்கும் எத்தனையோ வாய்ப்புகளைக் கண்டறிந்து, நம்மைவிட்டு இந்தக் குறை காணடிப்போமே!
பிரம்மாகுமாரிகள் இயக்கம் முழுக்க முழுக்க பெண்களாலே இயங்கிவரும் ஒரு உலகளாவிய தொண்டு நிறுவனம். இங்குப் பெண் தன்மைகளான அன்பு, ஆனந்தம், அமைதி, பணிவு, பொறுமை, பொறுப்பு மற்றும் இரக்கம் போற்றப்படுகின்றது, இங்கு வரும் அனைவருக்கும் இதன் அடிப்படையில் தாய்மார்களாலேயே நடைமுறை ஞானம் கற்றுத்தரப்படுகின்றது. சுமார் 136தேசங்களில், 9000க்கும் மேற்பட்ட கிளைநிலையங்களுடன் பிளாட்டினம் ஜூப்பிளி கொண்டாடும் ஒரு சேவை நிறுவனம் உலகில் ஏங்குமில்லை. பெண்தன்மையினாலே தான் இந்த அரியப் பெரிய சாகசத்தைச் செய்விக்கமுடியும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். இதுதான் உலகமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.
மகாபாரத யுத்தமே பெண்தன்மையை மதிக்காததால் தான் ஆரம்பமாகின்றது. ஒரு பெண்ணால்(சிகண்டி) தான் முடிக்கப்படுகின்றது, ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவதன் அர்த்தமே # ஆண்கள் பெண்கள் அனைவரும் ஆத்மாக்கள், அனைவருக்குள்ளும் பெண்குணாதிசியங்கள் இருக்கின்றன என்பதாகும். ஆத்மாவில் உள்ள ஆண்குணாதிசியங்களால் மென்மையான அமைதியான ஒரு பொன்னுலகம் என்பது படைக்கமுடியாது, அது உண்மையாக ஆக்கவேலையை விட அழிவிற்குத்தான் அதிகமாகப் பயன்படும். இந்தியா முழுவதுமான ஓர் ஆய்வில் இறை குணாதிசயங்கள் அதிகபட்சமாகப் பெண்களுக்கே இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே பெண்களை பண்புகளின் உறைவிடமாகப் பார்த்து, கற்றுக்கொண்டு, நடைமுறைப்படுத்தினால் இவ்வுலகில் மீண்டும் பொன்னுலகம் மலரும் என்பதில் மாற்றமில்லை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

