மதநல்லிணக்கம், உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தி
80வது சிவஜெயந்தி (மகா சிவராத்திரி) நல்வாழ்த்துக்கள் !!
மகா சிவராத்திரியின் ஆன்மிக மகத்துவம்
மகா சிவராத்திரி விழா பாரதம் முழுவதிலும் சிரத்தையோடு கொண்டாடப்படுகின்றது. இத்திருநாளில் பக்தர்கள் விரதமிருந்து முழு இரவும் கண்விழித்து சிவலிங்கத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து பக்தி செய்கிறார்கள். இந்தத் திருநாளை ஆன்மிக சிறப்பு உணர்ந்து கொண்டாடவேண்டுமென்றால் கடவுள் சிவனைப் பற்றியும், சிவராத்திரியை எதன் ஞாபகார்த்தமாக கொண்டாடுகின்றோம் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இராமேஸ்வரம், கோபகேஸ்வரம், அமர்நாத், சோமநாத், விஸ்வநாத் என்று பாரதம் முழுவதிலும் உள்ள பிரசித்தி பெற்ற 12 ஜோதிர்லிங்கங்கள் சிவனின் தெய்வீக கர்த்தவியத்தை எடுத்துக்காட்டுகின்றன.
இந்த 12 ஜோதிர்லிங்கங்களும், கடவுளின் ரூபம் ஒளியாக இருப்பதை உணர்த்துகின்றன. சிவனுடைய லிங்கரூபம், கடவுள் மனித ரூபத்தில் இல்லாமல், நிராகாரமாக (உடலற்றவராக) இருக்கின்றார் என்பதை காட்டுகின்றது. மேலும் சிவனை “சுயம்பு” என்று வர்ணிப்பதன் பொருள், பரமாத்மாவான அவருக்குமேல் படைப்பவர் என்று யாருமில்லை என்பதாகும்.
சிவன் என்ற சொல்லின் பொருள் அனைத்து ஆத்மாக்களுக்கும் நன்மை செய்பவர் என்பதாகும். சிவலிங்கத்தில் இருக்கும் 3 கோடுகளின் பொருளாவது, சிவனே பிரம்மாவின் மூலம் புதிய உலகைப் படைக்கின்றார். விஷ்ணுவின் மூலம் காத்தருளுகின்றார். விகாரங்கள் மற்றும் அநீதியை அதர்மத்தை அழிக்கின்றார். அனைத்து ஆத்மாக்களுக்கும் முக்தியும், ஜீவன் முக்தியும் அருளுகின்றார்.
சிவராத்திரி திருவிழா, இந்த பூலோகத்தில் இருள் என்கின்ற அறியாமை நிறைந்திருக்கின்ற நேரத்தில் கடவுள் சிவன் அவதரிப்பதைக் குறிப்பதாகும். ராத்திரி என்பது ஆத்மாக்களாகிய நாம் நம்மைப் பற்றி, கடவுளைப் பற்றி மற்றும் விகாரங்கள் நிறைந்த உலகின் முதல், இடை, கடை நிலை அறியாமல் இருப்பதைக் குறிப்பதாகும். சிவனே ஞானக்கடலாக வந்து, அறியாமையிலிருக்கும் நமக்கு ஞானம் என்ற ஒளியைக் கொடுத்து உண்மையைப் புரிய வைக்கின்றார். அதர்மம் தலைதூக்கி இருக்கும்போது நான் வருவேன் என்று கூறியதற்கேற்ப தூய்மையற்ற கலியுகத்தை மாற்றி, தூய்மையான தெய்வீக சத்யுகத்தை, சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார்.
நாம் ஏன் மகாசிவராத்திரியை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறோம் என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பாக இந்த உலக சுழற்சி அதாவது இயக்கத்தை பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம். இந்த உலகம் எவ்வாறு இரவு-பகல் என்று மாறி மாறி வருகின்றதோ அதே போன்று இந்த உலகம் சொர்க்கம்-நரகமாகவும், புதிய உலகம் -பழைய உலகமாகவும், தர்மயுகம்-அதர்மயுகமாகவும் மாறிமாறி நிகழ்கின்றது. இறைவன் இந்த உலகை, புதிய யுகமாக தர்மயுகமாக சுகமான உலகமாக, வைகுண்டமாக, சொர்க்கமாகத்தான் படைத்திருந்தார். காலங்கள் செல்லச் செல்ல எந்த ஒரு பொருளும் புதியதிலிருந்து பழையதாக ஆவது இயற்கையின் நியதி. அவ்வாறு இந்த புதிய உலகமும் பழையதாக அதர்மம் நிறைந்ததாக, துக்கமானதாக, கலியுகமாக ஆகிவிட்டது. இறைவன் எப்பொழுதெல்லாம் அதர்மம் அதிகரிக்கின்றததோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நானே வருவேன் என்ற வாக்களிதுள்ளாரோ, அதன்படி அதர்மம் நிறைந்த வேளையில் அறியாமை சூழ்ந்த நேரத்தில் இவ்வுலகில் அவதரித்து இவ்வுலகை புதியதாக மாற்றிச் சென்றார். இவ்வாறு இறைவன் வந்து செல்லலும் இந்த நிகழ்வை உணர்த்தி நினைவூட்டும் வகையிலே இந்த மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வாறு கொண்டாடி வரும் இவ்வேளையில் மற்றொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இப்பொது நடைபெறுவது தர்மயுகமா? அதர்மயுகமா? ஆம் அதர்மம் நிறைந்த உலகம் என்பது உங்களின் பதிலாக இருக்குமேயானால் இறைவன் வரவேண்டிய நேரமும் இதுதானே! எனவே இறைவன் தனது வாக்கின்படி இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள அபுமலை என்ற இடத்தில் பிரஜாபிதா பிரம்மா என்பவரின் சரீரத்தில் மீண்டும் அவதாரம் செய்து பிரம்மா குமாரிகள் மற்றும் பிரம்மா குமாரர்கள் மூலமாக சகஜமான இராஜயோக தியானம் மற்றும் ஆன்மிக ஞானத்தை வழங்கி மீண்டும் இவ்வுலகை சொர்க்கமாக, தர்மயுகமாக, மாற்றக் கூடிய காரியத்தை செய்து கொண்டிருக்கிறார். இதனை உணர்ந்த நாங்கள் இறைவனுடைய உயர்ந்த வழிகாட்டுதலின் படி நடந்து எங்கள் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவருவதன் கூடவே உலகமாற்றத்திற்கான காரியத்தை செய்வோம். இதைப்பற்றி மேலும் விபரமாக அறிந்து கொண்டு ஆத்மாக்களாகிய நம் அனைவருடைய தந்தை வந்துவிட்டார் என்கின்ற செய்தியை உணர்ந்து தாங்களும் அறிந்து இறைவனிடமிருந்து உங்களது பிறப்புரிமையான சொர்க்க ஆஸ்தியை பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
சிவராத்திரி – சிவஜெயந்தியின் மகத்துவம்
உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களின் தந்தை மேலான இறைவன் பரமபிதா பரமாத்மாவின் திவ்யமான பிறப்பைக் கொண்டாடும் நாளே சிவராத்திரி ஆகும். கிருஷ்ணபட்சத்தில் சதுர்த்தசியாக இருந்து பூரண அந்தகாரம் (இருள்) நிறைந்த மாசி மாத கடைசியில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது ஆத்மாக்களின் அஞ்ஞான இருள், விகாரம் மற்றும் அசுர இலட்சணங்களின் அறிகுறியாகும். இதன்பிறகு சுக்லபட்சம் ஆரம்பமாகிறது. அதாவது அஞ்ஞானம் மற்றும் துக்கத்தின் சமயம் முடிந்து தூய்மையான சுகத்தின் படைப்பு ஆரம்பமாகிறது. பரமாத்மா இந்நேரத்தில் அவதரித்து எளிய ஞானம் மற்றும் சகஜ இராஜயோகத்தின் மூலம் மனிதநேயம், மத நல்லிணக்கம், உலக சகோதரத்துவம் மற்றும் உலக அமைதியை நிலை நாட்டுகிறார்.
சிவராத்திரியின் சிறப்பு :
“கண்விழித்தல்” என்றாலே உணர்விலிருத்தல் என்பதாகும். “விரதமிருப்பது” என்றாலே மனதிற்கு தீய வீணான மற்றும் விகாரமான எண்ணங்கள் என்ற உணவை அளிக்காமல் இருப்பதாகும். அதே போன்று “உபவாசம்” என்றாலே அருகாமையில் வாசம் செய்தல் என்பதாகும். அதாவது எக்கணமும் நினைவின் மூலம் இறைவனுக்கு அருகில் வாசம் செய்வதாகும்.
பரமபிதா பரமாத்மா சிவனின் சத்திய அறிமுகம்
திருஉருவம் : பாரதத்தின் 12 திருத்தலங்களில் ஜோதிர்லிங்கம் பூஜிக்கப்பட்டு வருகின்றது. இதனால் இறைவன் பரஞ்ஜோதியாக விளங்குவது தெளிவாகிறது. ஸ்துல உருவமில்லாதவராக இருப்பினும் சுயம் ஒளிப்பிரகாசமானவர் இறைவன்.
பெயரற்றவரின் திருப்பெயர் : பெயர்களும் வார்த்தைகளும் வேறுபட்டு இருப்பினும் அவையாவும் இறைசக்தியாகிய ஈஸ்வரனை, அல்லாவை, ஜோதியை குறிப்பதை நாம் உணருகிறோம். பாரதத்தில் “சிவா’ என்றும் பாபிலோனில் “சிவுன்’ என்றும் முகம்மதியர்கள் “சங்-ஏ-அஸ்வத்’ என்றும் அழைக்கின்றனர். காரணப்பெயரான சிவா என்றால் நன்மைபுரிபவர் என்பதாகும்.
இருப்பிடமற்றவரின் இருப்பிடம் : சூரிய சந்திர நட்சத்திர மண்டலங்களுக்கு அப்பாற்பட்ட ஆறாவது தத்துவமான செம்பொன்நிற ஒளிக்கதிர்களால் நிறைந்த உலகமே இறைவன் மற்றும் ஆத்மாக்களாகிய நம் அனைவரின் உண்மையான வீடான பரந்தாமமாகும்.
ஈடுஇணையற்றவரின் குணங்கள் : அனைத்து ஆத்மாக்களிலும் மேன்மையானவர் சர்வசக்திவான் அனைத்து குணங்களிலும் கடலானவர் பதீதபாவனர் எல்லைக்கு அப்பாற்பட்ட பெருமை மற்றும் மகிமைக்கு உரியவர்.
செய்விப்பவரின் செயல்கள் : பிரஜாபிதா பிரம்மாவின் மூலமாக தெய்வீக ஞானத்தையும் இராஜயோக தியானத்தையும் அளித்து புதுஉலகை படைப்பதாலும் விஷ்ணுவின் மூலமாக புதுஉலகை பாதுகாத்து பரிபாலனை செய்விப்பதாலும் சங்கரர் மூலமாக தீமை நிறைந்த கலியுகத்தை விநாசம் செய்விப்பதினாலூம் திரிமூர்த்தி சிவன் என அழைக்கப்படுகிறார்.
இறைவனின் 80 வது சிவஜெயந்தி :
மனித குலத்திற்கு படைப்பு மற்றும் படைப்பவரின் (சுயம் தனது) ஞானத்தை அளிப்பதற்காக பிரஜாபிதா பிரம்மாவின் சரீரத்தையும் சிந்தையையும் ஆதாரமாக எடுக்கிறார். இவ்வாறு பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் புதிய ஞானம் தந்து, யோக சக்தியையும் அளித்து புதிய யுகமான, சத்யுகத்தைப் படைக்கிறார். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய இம்மூன்று திவ்ய காரியங்களால் அவர் மும்மூர்த்தி, திரிமூர்த்தி சிவா என அழைக்கப்படுகிறார். இவ்வாறு உலக மங்கள காரியத்திற்காக, பிரஜாபிதா பிரம்மாவின் சரீரத்தை 1936-ல் ஆட்கொண்டதன் காரணமாகவே இவ்வாண்டு 80வது சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.


