– பி.கு.பாலாஜி, பிரம்மா குமாரிகள், புதுக்கோட்டை
விருகபுரி என்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டை விஷ்ணுவர்தன் என்ற மன்னர் சீரும், சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். நாட்டு மக்கள் நலமுடன், வளமுடன் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவரது மக்களும் அவ்வாறே வாழ்ந்து வந்தனர். இருப்பினும் மன்னருக்கு வெகு காலமாக ஒரு மனக்குறை இருந்து வந்தது. தனக்குப் பின் தனது நாட்டை ஆள்வதற்கு ஒரு ஆண் வாரிசு இல்லையே என்பது தான் அந்த குறையாகும். மன்னருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தாள். அவளும் (இளவரசி) திருமணம் செய்யக் கூடிய வயதுடையவளாக இருந்தாள்.
அரசர்: தேவி! நமது மகளுக்கு விரைவிலேயே திருமணம் செய்ய வேண்டும். யாரை தேர்ந்தெடுப்பது?
அரசி: நமது நட்பு நாடுகளின் இளவரசர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் பிரபுவே!
அரசர்: ஆனால் தேவியே! தேர்ந்தெடுக்கும் இளவரசர் நம்முடன் இருந்து இந்த இராஜ்யத்தை ஆளுபவராக (வீட்டோடு மாப்பிளையாக) இருக்க வேண்டும். அவ்வாறு யார் இருக்கிறார்கள்?
அரசி: இதற்கு யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் பிரபுவே!
அரசர்: அப்படியென்றால் வேறு யாரை தேர்ந்தெடுப்பது?
அரசி: நமது நாட்டு மக்களிலேயே யாரையாவது தேர்ந்தெடுக்கலாம் மன்னா! எந்த ஆசையும், சுயநலமும் இல்லாத ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் பிரபு.
அரசர்: அப்படிப்பட்டவர் யார்? என்று நீயே கூறிவிடு தேவி!
அரசி: ஆசையின்றி, சுயநலமின்றி இúப்பவர் யார்? என்று பார்க்கின்ற பொழுது சந்நியாசிகள் தான் சிறந்தவர்கள் என்று தோன்றுகிறது பிரபுவே!
அரசர்: எந்த சந்நியாசி இதை ஏற்றுக் கொள்வர்?
அரசி: நமது நாட்டின் தென்கோடியிலுள்ள குளக்கரையில் சிறந்த சந்நியாசிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் சென்று நமது விருப்பத்தை தெரிவிக்கலாம். யார் ஒருவர் இதை ஏற்றுக் கொள்கிறாரோ அவரை அழைத்து வந்து அரியணையில் அமரச் செய்யலாம்.
அரசர்: நாளை காலையில் முதல் காரியமாக இதைச் செய்யலாம் தேவியே! என்று பேசியபடி உறங்கி விட்டனர்.
இந்த உரையாடலை மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த கொள்ளையனுக்கு ஒரே மகிழ்ச்சி தான். அடுத்த நாள் காலையில் அவனும் முதல் வேலையாக சந்நியாசி போன்று வேடமணிந்து தெப்பக்குள கரைக்குச் சென்று அமர்ந்து விட்டான். மன்னரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் மன்னரும், அரசியாரும் அங்கு வந்து ஒவ்வொரு சந்நியாசியிடமும் தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். ஆனால் எந்த ஒரு சந்நியாசியும் அவர்களது விருப்பத்திற்கு செவி சாய்க்கவில்லை. கடைசியில் மாறுவேடம் அணிந்திருந்த கொள்ளையனிடம் வந்த மன்னர் தனது விருப்பத்தை தெரிவித்தார். உடனேயே சரி என்று கூறிவிடாமல் சிறிது நேரம் அமைதியாக இருப்பது போல் நடித்தான். அவனது அமைதியைப் புரிந்து கொண்ட மன்னர் இவர் ஏற்றுக் கொண்டதாக நினைத்து நாளை தாங்கள் அவசியம் அரண்மனைக்கு வாருங்கள் என்று கூறி புறப்பட தயாரானார். ஆனால் அந்த சிறிது நேர அமைதியின் பொழுது அந்த கொள்ளையனின் மனதில் திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது, “சந்நியாசி போன்று வேடமணிந்து நாடகமாடும் எனக்கே இவ்வளவு மரியாதை எனில் உண்மையிலேயே நான் சந்நியாசியாக இருந்திருந்தால் எனக்கு எவ்வளவு மரியாதை கிடைக்கும்!”. அந்த எண்ணம் மனதில் தோன்றியதும் அவனது ஆசைகள் அனைத்தும் பறந்து போய் விட்டன. உடனேயே மன்னரிடம் “முடியாது” என்று கூறிவிட்டு உண்மையிலேயே உண்மையான சந்நியாசியாகவே மாறி விட்டான்.
இதைத் தான் ஒரு விநாடியில் ஜுவன்முக்தி என்று இறைவன் கூறுகின்றார். உள்நோக்கு முகத்துடன் இருந்து தனது மனதை இறைவனின் நினைவில் எந்த அளவிற்கு அமைதியாக வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நாம் நமது பழைய சமஸ்காரங்கள் மற்றும் பந்தனங்களிருந்து விநாடியில் விடுபட முடியும்.



