பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை
வாழ்க்கை ஒரு பாடம், அதை படிக்கத் தெரியாதவர் யாரும் இருக்கமுடியாது. கடினமான படிப்பை கஷ்டப்பட்டு படிக்கின்றனர். உலகிலேயே மிகவும் பெரிய படிப்பு என்றால் வாழ்க்கைப் பாடம் தான். ஆனால் அதை படிக்காதவர் யாரும் இருக்க முடியாது. சிலருக்கு நான் வாழ்க்கைப் பாடத்தை படிக்கின்றேன் என்ற உணர்வு இல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம். தவிர அனைவரும் கட்டாயம் படித்துக்கொண்டிருக்கும் பாடமிது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பாடம் இருக்கும். இதற்கென்று எந்த வரையரையும் இல்லை. இந்தப் பாடம் மிகவும் விஸ்தாரமான பாடம். படித்து கைதேர்ந்தவர்கள் பெரிய மேடைதனில் ஏறி சவாலாக குறிப்பிட்ட நேரமே பேசமுடியும். ஆனால் படிக்காதவர்கள் கூட தனது வாழ்க்கையைப்பற்றி பேசச் சொன்னால் எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் பேசுவார். இதற்கு எந்த படிப்பறிவும் தேவையில்லை, பட்டறிவு ஒன்றே போதுமானது.

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு,
பாடம் படிக்காத மேதைகளும் பாரிலுண்டு !
வாழ்க்கையில் அனைத்தும் பாடம் தான், நல்லவையும். தீயவையும் பாடம் தான். பிரச்சனைகளும் பாடம் தான், வரும் இன்னல்கள் தான் நல்ல பாடங்களை கற்றுத்தரும், கற்றுக் கொள்ளும் அளவிற்கு இருக்கும். சரியாக சீக்கிரமாக எளிதாகவும் கற்றுக் கொள்வோம். நல்லவைகளிலிருந்து இன்னல்கள் நீங்கும் விதத்தை பற்றி கற்றுக் கொள்வோம், அது உண்மையில் இன்னல்களைப் பற்றிய பாடம் தான். இது தான் நல்லவையாக பிரதிபலிக்கின்றது.
மகாபாரத்தில் ஒரு இடத்தில், தர்மர் மற்றும் துரியோதனன் இருவருள் யாருக்கு இளவரசன் பட்டம் சூட்டுவது என நிர்ணயிக்கும் பரிச்சையாக ஒரு கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு தீர்ப்பு வழங்க பணிக்கப்படுகின்றது. அனைத்திலும் முதல் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் துரியோதனனோ மூவருக்கும் மரணதண்டனையை பிறப்பிக்கின்றார். ஆனால் தீரவிசாரித்த தர்மர், அதில் படித்த அந்தனருக்கு மரணதண்டனையும், புத்திசா-யான வணிகருக்கு அயுள் தண்டனையும், படிப்பறிவில்லா சூத்திரனுக்கு 5 ஆண்டுகால சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கின்றார். படித்ததினால் மரணதண்டனையா? அல்லது படிக்காததால் வெறும் சிறைதண்டனையா? என்ற கருத்திற்கே இடமில்லை. படித்ததின் பலனை பயன்படுத்தத் தெரியாதவனுக்கு முடிவு பெரிய இன்னலாக பெரிய பாடத்தை கற்றுத்தருகின்றது. எனவே வாழ்வில் வரும் இன்னல்கள் அனைத்தும் பெரும் பாடத்தைத்தான் கற்றுத்தரும் என்பது தெளிவு.
வாழ்க்கை பாடம் வயது வரம்பின்றி அனைவருக்கும் பொதுவானதாக உள்ளது. இது வாழ்க்கையின் பொக்கிசங்களில் ஒன்று, கற்றது கைமண் அளவு, கல்லாதது கடலளவு என்பார்கள். ஆனால் வாழ்க்கை பாடமோ, உங்கள் கையளவு தான், ஆனால் அதை வைத்துக் கொண்டு உலகத்தை படித்துவிடமுடியும். கையளவு என்பது உங்கள் கையில் அமைந்திருக்கும் எண்ணங்களால் ஆன கைரேகையளவு என்றும் கூறலாம். ஆகையால் தானோ “எண்ணமே வாழ்வு” என்றும், “உங்கள் வாழ்வு உங்கள் கைகளில் உள்ளது” எனவும் கூறுகின்றனரோ! உங்களைப் நீங்கள் படித்துவிடடால், உலகினையே படித்துவிடலாம். ஏனெனில் உலகினை அளக்கமுடியாது அதுபோன்று எண்ணங்களை அளக்க முடியாது. எண்ணம் கடல்போன்றது, கடலுக்கு கரையேயில்லை, எண்ணங்களுக்கு எல்லையேயில்லை. இவ்வளவு மகத்தான எண்ணங்கள் என்ற எழுத்தால் ஆனதுதான் நமது வாழ்க்கைப்பாடம். எனவே
எண்ணங்களை படியுங்கள்
எண்ணங்களை உற்றுபாருங்கள்
எண்ணங்களை கூர்ந்து நோக்குங்கள்
எண்ணங்களாலே கேளுங்கள்.
எண்ணங்களால் உங்களுக்கு தேவையானவற்றை நம்புங்கள்.
எண்ணுவதை நல்லதாக எண்ணுங்கள், நல்லவையே பாடமாக அமையும்
மறந்தும் எண்ணுவதை தீயவையாக எண்ணாதீர்கள்
பிடிக்காத சூழ்நிலைகளை எண்ணங்களால் ஒதுக்காதீர்கள்.
நல்லெண்ணங்களால் போராடிப் பாருங்கள், வெற்றி மாலையாக மாரும் !
பாடம் என்றால் அதில் பயிற்சி(practice), திருப்பிப்பார்த்தல் (Revise) ஆராய்ச்சி (Research), சோதனை(Experiment), அனுபவம் (Experience), தேர்வு (Examination), முடிவு(Result), திரும்ப மதிப்பாய்வு (Revalue) புதிய முடிவு(Re-result) என்று அனைத்தும் உண்டு. நீங்கள் இவற்றுள் எவற்றையெல்லாம் கடைபிடித்து வந்தீர்கள் என்று நாம், நமக்கு நாமே பார்க்கவேண்டும். நான் இவ்வளவு தான் படித்துள்ளேன் எனவும், நான் இத்தனை பட்டம் வாங்கியுள்ளேன் எனவும் பேசும் நாம் மேலே கண்ட எவற்றை எல்லாம் வாழ்க்கையில் யோசித்துப்பார்த்திருக்கின்றோம்?
வாழ்க்கைப் பாடம் எங்கு துவங்குகினறது, எங்கு முடிகின்றது? உயிரானது உடலை எடுத்து வாழ்க்கைப்பாடத்தை ஆரம்பிக்கின்றது, உடலை துரந்து முடிக்கின்றது. மீண்டும் மற்றோரு உடலில் தொடர்கின்றது. உலகாயத படிப்பிற்கான பட்டத்தை உடலின் பெயருக்கு பின் போடுகின்றோம் ஆனால் வாழ்க்கை பாடம், உடலால் படிப்பதன்று, உயிரால் உள்ளத்தால் படிப்பதாகும். இந்த உடல், எழுதப்படிக்க பயன்படும் காகீதம் போன்றதாகும். இந்த வாழ்க்கைப்பாடத்தால் அன்பு, அறிவு, அமைதி., ஆனந்தம். ஆற்றல் மற்றும் தூய்மை என்ற பட்டங்கள் உயிருக்கு சொந்தமானதாகின்றது. உடலுக்கு அல்ல. அந்த குணஅலகு, உடலால் தெரிவிக்கப்படுகிறது மற்றும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது.
வாழ்க்கைப்பாடத்தில் முழுவெற்றி அடைய. நல்லெண்ணங்கள்(Positive thought), காலந்தவறாமை(Time Management)இதன் ஆதாரத்தில் அமையும் ஆரோக்கியம்(Health), தெய்வீககுணங்கள் சக்திகள் என்ற செல்லவங்கள்(Wealth). இவையணைத்திற்கும் முடிவாக கிடைப்பது மன மகிழ்ச்சி(Happiness) மற்றும் முழு திருப்தியாகும்(Satisfaction).
எழுத்தறிவித்தவர்களை இறைவன் போல் கருதும் நாம் யாராலும் கற்றுத்தரமுடியாத, கற்றுத்தரஅவசியமில்லாத வாழ்க்கைப்பாடம் எவ்வளவு உயர்ந்தது. எழுத்தை பார்க்கமுடியும்,படிக்கமுடியும். வாழ்க்கைப்பாடமதை உணரத்தான் முடியும். பார்த்தறிவதைவிட உணர்ந்தறிவதே உயர்ந்தது. உருவமில்லாதவைகளுக்கு எல்லாம் ஜோதி எனப்பெயரிட்டு நம் பெரியவர்கள் உருவம் தந்துள்ளனர். ஆகையால் உணர்ந்தறிவதை ஞானஒளி எனவும், ஞானப்பிரகாசம் எனவும் அழைக்கின்றனர். வாழ்க்கையைப் படித்தவர்கள் இறுதியில் உணர்வின் வழி உருவாகும் ஞானப் பழத்தை பலனாக அடைகின்றனர்.
கருணையை கண்களிலும்,
இதயத்தில் ஈரத்தையும்,
அன்பை மனமாளிகையாகவும்
கொண்டவர்கள் தான் வாழக்கைப்பாடத்தை நன்கு கற்றவர்கள்.
தான் என்ற எண்ணத்தை உதித்து
தன் முனைப்பை விரட்டி
உடலழகை கடந்து
உண்மையாக உள்மையத்தை கண்டு
சாவையும் சமமாக எற்றுக்கொண்டு
நொடிப்பொழுதனைத்தையும் மகிழச்சியாக களித்து
வெளியேயின்றி உள்ளே தேடும் பாடத்தை கற்றவரே ஆன்மீக வாழ்க்கை வாழத்தெரிந்தவர்.
ஒவ்வொருவரிடமிருந்தும் பாடமாக எதை விரும்புகின்றோமோ அதை நம்மால் கற்றுக்கொள்ளமுடியும். இந்த உலகில் நம்மைச் சுற்றி தீமைதான் உள்ளது என்று அதை விலக்கி வாழமுடியாது, மாறாக கொஞ்சம் நல்லவையும் இருக்கும் அல்லவா! அவற்றை நம் வாழ்க்கையின் பிரதானமாகக் கொண்டு நடப்பவர்கள் முன்னேற்றம் அடைகின்றனர். இந்த உலகில் எல்லாத் திறமைகளும் உள்ளவர்களும் இல்லை, எந்த திறமையுமே இல்லாதவர்களும் இல்லை, சிறகுகள் இல்லாத பறவைக்கு கனத்த கால்கள் உண்டு, வண்ணமில்லாத மலர்களுக்கு தான் வாசம் கூடுதலாக உண்டு.
வாழ்க்கையில் உலக பிரபஞ்சம் நமக்கு தந்திருக்கும் வாய்ப்பும்(chance)வசதியும்(facility), தேர்ந்தெடுப்பும்(choice), பயன்பாடு(utility), போன்றவற்றை பாடமாக அடைபவரே வாழ்க்கைப் படகை கரை சேர்ப்பார்.

