பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை
வெற்றிகரமான வாழ்க்கை என்பது பரிபக்குவமான முடிவுகளை பிறப்பிப்பதாகும். ‘பரிபக்குவம்’ என்பதை முதிர்ச்சி, கற்றுத் தேர்ந்த நிலை, ஆழ்ந்த அனுபவம் என்றும் கூறலாம். எதையும், எச்செயலையும் பக்குவமாக அதாவது விதிப்படி செயல்படுத்தும் பொழுது அதில் வெற்றி கிட்டும்.உதாரணமாக நல்ல விதையை விதைத்தபின் அதை பக்குவமாக வளர்க்க வேண்டும், இல்லையெனில் அது பலன் தராது.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் 10 வயது வரை மிக முக்கியமான காலகட்டமாகும். இக்காலகட்டத்தில் ஒருவர் எதைப் பார்க்கின்றாரோ, கேட்கின்றாரோ, உணர்கின்றாரோ மேலும் கற்றுக் கொள்கின்றாரோ அதுவே அவர் வாழ்க்கையாக அமைகின்றது. பக்குவத்தின் ஆரம்பமே இங்கு தான் ஏற்படுகின்றது. இவ்வயதில் நல்வழியை ஒருவருக்கு காட்டிவிட்டால் அவர் உலகையே ஆளுவார் என்பதில் சந்தேகமில்லை. ஒருவரின் முன்னேற்றத்தை இக்காலகட்டத்தில் கணித்து விடலாம். எனவே தான் ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்கின்றார்கள். தெளிவு, அறிவு, ஞானம் இவற்றிக்கு ஆதாரமான ‘புரிதல்’ (Understanding) என்பது இவ்வயதில் மிக அவசியமானது. 10 ஆண்டுக்கு முன் காட்டில் தனது இளவரசனை தொலைத்த இராஜா, தற்பொழுது காட்டில் ஒரு புதுவிலங்காக தன் மகனை கண்டு வியந்து, அவரை இளவரன் என்று புரியவைக்க கஷ்டப்படவேண்டியதாயிற்று. இவ்வயதில் எதைப் புரிந்து கொள்கிறோமோ அதுவே ஒவ்வொருவரின் வாழக்கையாகின்றது. புரிந்து கொள்ளும் கலை, ஒரு மனிதனை மிருகத்திடமிருந்து பிரித்துக் காட்டுகின்றது. ஆகையினால் தான் புரிந்து கொள்ளாதவரை விலங்குடன் இணைத்து பேசுகின்றார்கள்.
பொதுவாக ஒருவர் கூற மற்றவர் முதலில் ‘அறிவர்’ பின்பு அதை சிறிது சிந்தித்தாரானால் அது புரியப்படும். புரிந்ததை மீண்டும் செயல்படுத்தினாரானால் அது ‘அனுபவமாக’ மலரும். அதாவது ‘பயிற்சி’ எந்த ஒரு வெற்றிக்கும் மிகவும் அவசியமானது. பயிற்சியே ஒரு மனிதனை முழுமையாக்கும் ‘அனுபவத்தை’ கொடுக்கிறது. பல அனுபவங்களின் கோர்ப்புதான் மனிதனை உணர்வுப்பூர்மான, மனிதாபிமான செயலை செய்ய வைக்கின்றது. இதைத் தான் பரிபக்குவம் என்கின்றோம்.
பரிபக்குவமான நிலையில் மனிதனிடம் பொறுமை, அன்பு, பணிவு, இனிமை, உறுதி, தைரியம், சக்தி, ஆனந்தம் மற்றும் கம்பீரம் போன்ற அனைத்து குணங்களும் நிரந்தரமாக இருக்கும். அதாவது இவை இருந்தால் அதற்கு பெயர் பரிபக்குவம். எல்லாம் தெரியும் என்ற ஆணவம். கோபம், மனிதாபிமானமின்மை, மன அழுத்தம், அவசரம் போன்ற எதுவும் இருக்காது. உதாரணமாக காய்ந்த ஒலை சலசலக்கும் என்பர். அதாவது பரிவக்குவநிலை நிறைகுடம் போன்றது. கல்யாணப் பந்தியில் முதலில் இருக்கும் கூச்சல், உணவு பரிமாறியவுடன் குறைந்து போகும். எதுவும் நிறையும் பொழுது பக்குவம் ஆகிவிடுகின்றது. தேனீயின் ரீங்காரம் தேன் பருகும் வரைதான்.
பரிபக்குவநிலை அடைவது மிக எளிது. ஆனால் அதற்கான விதிமுறைகள் கடினம். அதாவது ‘அழிப்பது எளிது, ஆக்குவது கடினம்’, ‘படிப்பது எளிது நடப்பது கடினம்’, ‘சொல்வது எளிது செய்வதே கடினம்’, என்று கூறிக்கொண்டே போகலாம். ஒரு புதுக் கவிதையை நினைவு கூறுவது அவசியம், யாதெனில் ‘கஷ்டம் கண்டு துவளாதே! அது நல்லகாலத்தின் துவக்கம் !’, ‘எளிது கண்டு தூங்காதே! அது ஏமாற்றத்தின் துவக்கம்!’ என்பர்.
எப்பொழுதும் செயல்முறை கடினம்தான். அதை செய்துவிட்டால் இலக்கும் மிக எளிதுதான். உதாரணமாக
- கோவிலில் படிக்கல்லாக கிடப்பதை காட்டிலும் பூஜைக்குரிய மூர்த்தியாக ஆவது கடினம்தான்.
- கூட்டுப் புழுவாக அடைப்பட்டு பொறுமையாக இல்லையென்றால் வண்ணத்துப்பூச்சியாவது கடினம்தான்.
- கடல் நீரும் சிப்பிக்குள் சவம் போன்றதொரு தவம் செய்யாதொளிய முத்தாவது கடினம்தான்.
- துவச்சலின்றி, உளியும் உன்னதப் பொருளை உருவாக்குவது கடினம்தான்.
- குழந்தையும் குத்தகைக்கு 10 மாதம் குந்தியினுள்ளே இல்லையெனில் கூத்தாடி உடைந்திடுமே!
இறைவனை தேடுவது ஒரு பக்கம் இருந்தாலும் தனது வாழ்க்கையில் உயர்ந்த நிலை அடைய அனைவரும் முயற்சிப்பது உண்டு. சுருங்கக்கூறின் இதற்காகத்தான் இறைவனை தேடுகின்றோம் என்பது சத்தியம்.
இன்றைய உலகில் மனம் போன போக்கில் மனிதர்கள் வாழ்கின்றார்கள். எது கிடைக்கிறதோ, அதை எப்படி பயன்படுத்த கூடாதோ, அப்படி பயன்படுத்துகின்றார்கள். இப்படித்தான் வாழவேண்டும், அப்படித்தான் வாழவேண்டும் என்று தானாக ஏதாவது நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். பரிபக்குவம் நாம் ஆகிவிட்டோமா என்பது நமக்கு தெரியாது. ஆனால் நம்முடைய செயலே அதை காட்டும் கண்ணாடி. நமது நடத்தையை ஒழுங்காக ஆக்க அறம் கூறும் வழியாதெனில்,
‘தானும் சுகமாக இருந்து மற்றவர்களுக்கும் சுகம் கொடுங்கள்’,
‘யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள், யார் தரும் துக்கத்தையும் எடுக்காதீர்கள்’ என்பது தான்.
இந்நிலை அடைய நீண்ட காலம் ஆகும் என்றும், நம்மால் இதை அடைய முடியாது என்றும் ஒரு பொழுதும் நினைத்துவிட வேண்டாம். அதற்கு எளிமையான வழிமுறைகள் உள்ளன.
நற்சிந்தனைகளை எழுப்பும் தியானம், தன்மீதும் பிறர் மீதும் ஆக்கபூர்மான எண்ணங்களை எழுப்புதல், எதிரியாக இருந்தாலும் சுபமான பாவனை, சுபஆசை வைத்தல். இவற்றை தினமும் மேற்கொண்டலே பரிபக்குவநிலை எளிதாக அடைந்து விடலாம். ஒரு ஊரில் ஒரு குருகுலம் இருந்தது. அங்கு ஒரு முனிவர் பல சிசியர்களுடன் வாழ்ந்து வந்தார். ஒரு முறை தனது சிசியர்களிடம் உங்களது வாழ்க்கையின் இலட்சியம் என்ன? என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை இலட்சியமாக கூறினார்கள். ஆனால் யாரை தனது முதல் சிசியர் என்று நினைத்துக் கொண்டிருந்தாரோ அவர் எதுவும் கூறவில்லை என்பதை அறிந்து வியந்து ஏன் இந்த
மவுனம் என்று வினாவினார். அதற்கு, அந்த சிசியர் மவுனம் கலைத்து கூறியது என்னவென்றால், தனது வாழ்க்கையின் இலக்காக எதுவும் அறிதிட்டுக் கூறாமல்,
காலத்தின் கோலம்,
வாய்ப்புகளின் வடிவம்.
வசதியின் வண்ணம்
இவை எனக்கு எதை தருகின்றதோ, அதை மனதார ஏற்றுக் கொள்வேன் என்றும். இலக்கென்று
எனக்கு எதுவும் இல்லாமல் இல்லை, அதுவே உண்மையாகிவிடும் என்பதில் தான் 100 சதவீதம்
உண்மையில்லை, என் முடிவை பிறப்பிப்பது- என் விடாமுயற்சி, காலம், இறைசக்தி இவைதானே
தவிர வேறு எதுவுமில்லை, இதைத்தான் நான் முன்வைக்கின்றேன் ஆகையால் மவுனம் காத்தேன்
என்று பொறுமையாக பதில் கூறினார். அப்படியானல் எது பரிபக்குவம் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்களேன்.

