நன்றி: The World Renewal, Magazine
இரக்கம், கருணை, மன்னிப்பு ஆகிய வார்த்தைகளை நமது ஆன்மீக பாதையில் அடிக்கடி பயன்படுத்தியிருப்போம். ஆனால், அவற்றின் உண்மையான அர்த்தம் என்ன? இரக்கம் என்பது ஒரு குற்றவாளியின் மீது தயை காட்டுகிற பண்பு என்பதாக ஒருவேளை நாம் நினைத்திருக்கக்கூடும் அல்லது ஒரு நீதிபதியின் விருப்புரிமை என்றோ அல்லது ஒருவரை மன்னிக்கும் அதிகாரம் பெற்ற ஒருவரின் செயல்பாடு என்பதாகவோ கருதலாம். அடுத்தவரின் துயரத்தால் ஏற்படுவதே கருணை. பெரிய மனதுடன் மன்னிக்கும் பண்பை உண்மையிலேயே பயிற்சி செய்யும் போதுதான் இது சாத்தியப்படும். ஆனால் இந்த இரக்கம், கருணை, மன்னிப்பு ஆகியவை சுயத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்.
ஆன்மீக பாதையின் அனைத்து கொள்கைகளையும் முதலாவதாக நமக்கு நாமே பிரயோகிக்க வேண்டியது அவசியமாகிறது. நாம் சுயமதிப்பு மற்றும் சுய அன்பை பெற்றிருக்கும் போதுதான் நம்மை நாமே மன்னிக்கும் பண்பை பெறுவது சாத்தியமாகிறது. சுய அன்பு என்பது சுயத்தின் மீது கருணை வைப்பது மற்றும் இரக்கத்தின் அர்த்தமென்பது நான் என்னுடைய மிகச் சிறந்த அனுகூலத்தின் பொருட்டு செயல்படுகிறேன் ஆனால் அது சுயநலமில்லாமல் எனக்கு உண்மையிலேயே நன்மை பயக்கக்கூடிய ஞானத்தை அறிந்து செயல்படுகிறேன் என்பதாகும்.
இரக்கத்தை நாடுவது பலவீனத்தில் இருப்பதாகப் பொருள்படும். ஒரு கொடுமையான நபரிடமிருந்து நான் இரக்கத்தை வேண்ட மாட்டேன். மாறாக முதல்படியில் காலடி எடுத்துவைக்கும் ஒரு நபரையோ, ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளும் நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிச்சயமான வழியில் நடக்கும் நபரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பேன். இந்த வகையில் என் உணர்வுகளை நான் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. என்னுடைய செயல்களின் பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்த முடியுமா? என்னுடைய வாழ்க்கையில் அதிகாரம் செலுத்துவதற்கு அவர்களை நான் அனுமதிக்கிறேனா? ஏனெனில் என் மீது நான் அதிகாரம் செலுத்துமளவிற்கு சுயமரியதையை நான் பெற்றிருக்கவில்லையா? சில நபர்கள் நம்மை அழைக்க வேண்டுமென்று விரும்புகிறோம். அவர்கள் அழைக்காததால் நாம் ஏமாற்றமடைகிறோம். அதன் அர்த்தம் என்னவெனில் நான் இரக்கமின்றி நடந்து கொள்வதன் மூலமும் என்னுடைய உணர்வுகளுக்கான பொறுப்பினை வேறொருவர் மீது சுமத்துவதன் மூலமும் அந்த நபர் என்னை காயப்படுத்துவதாக பழி சொல்வேன்.
அதுபோலவே, நாம் மன்னிப்பை மற்றவரிடமிருந்து நாடுவோமெனில் அதன் அர்த்தம் நமக்கு போதுமான அளவு சுய அன்பு மற்றும் சுய மதீப்பீடு இல்லை என்பதாகும். ஏனெனில், நான் போதுமான அளவு சுய அன்பும், சுய மதிப்பீடும் பெற்றிருந்தால் சொல், செயல், குண நலன்களுக்கு (சுபாவங்களுக்கு) நான் பொறுப்பேற்றுக்கொண்டு அவற்றில் சிறந்ததை தெரிவு செய்து கொள்வேன். இறுதியாக, நான் இரக்கத்தை வேண்டிடாத நிலையை அடைவேன். ஏனெனில் மன்னிப்பை கோரும் எந்தத் தவறையும் நான் செய்யப்போவதில்லை. ஆம், அவ்வப்போது செய்யும் சிறு தவறுகளுக்காக ‘தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்’ என்று நாம் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் சுய மரியாதையுள்ள ஒருவர் இதை எவ்வித குற்ற உணர்வோ, பச்சாதாபமோ இல்லாமலே சொல்ல முடியும்.
ஒவ்வொரு கணமும் இரக்கத்தையும், கருணையையும் நம்மீது பரிசோதனை செய்து பார்த்தோமானால், அடுத்தவரின் இரக்கத்திற்கு ஆளாக வேண்டியதில்லை. அடுத்தவர் என்மீது இரக்கப்படும் படியான நிலையில் நான் தொடர்ச்சியாக இருந்தேனென்றால், என்னை நான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தொடர்ந்து அடுத்தவரின் பச்சாதாபத்திற்கு ஆட்பட்டு இருப்பேன் என்றால் நான் மிகவும் சிறியவனாக, பிரயோசனமில்லாதவனாக என்னை உணர்வதோடு, தொடர்ச்சியாக பிறரிடம் இரக்கத்தை நாடுபவனாகவும், மன்னிப்பை வேண்டுபவனாகவும் இருப்பேன்.
தொடர்ந்து தவறு செய்வதும் அதற்காக தொடர்ந்து மன்னிப்பு கோருவதும் உண்மையிலேயே ஆரோக்கியமான நிலை அல்ல. இது ஆன்மாவின் ஆற்றலை வெளியேற்றி விடுவதோடு நம்பிக்கையையும் குலையச் செய்துவிடும். இதன் விளைவாக பலவீனமானவனாக, நம்பிக்கையற்றவனாக ஆகிவிடுவேன்.
எதிரிடையாக,சுய இரக்கம்(பச்சாதாபம்) என்பது இறுதியாக தான் மாற்றமடையாமல் சுயத்தை குணப்படுத்துகிற கிரியா ஊக்கியாக செயல்படும். பழைய சுபாவத்தின் சாயல் என்னுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதோடு, அது எனக்கு மிகுந்த துன்பத்தையும், வலியையும், இடர்பாட்டையும் தான் ஏற்படுத்தும். ஆகவே, நான் சுய இரக்கத்தை பயிற்சி செய்து நேர்மறையான வலியை நோக்கி செல்ல வேண்டும். இதைத்தான் கிரேக்க மொழியில் ‘எப்ஸ்பிளானியா’ என்ற சொல் இரக்கத்திற்கான வரையறையை பின்வருமாறு தெளிவுப்படுத்துகிறது.
“என்னுடைய இருதயத்திலிருந்து சிறந்தவற்றை வெளிப்படுத்துவதோடு என் புரிதலையும் வளப்படுத்துகிறது”.
எல்லா நம்பிக்கைகளிலும் (மதங்களிலும்) கடவுள் ஒருவரே மேலான இரக்கமுடையவர் அல்லது அவர் ஒருவரே ஆற்றுப்படுத்துபவர். இஸ்லாத்தில் ‘அல்-ரகுமான்’ மற்றும் ‘அல்-ரஹீம்’ என்றும், இந்துத்துவத்தில் ‘கருணா’ என்றும், ஆசியாவில் ‘குவான்-இன்’, ‘போதி சத்துவா’ என்றும் இரக்கம் மற்றும் கருணை ஆகியவை பிரதிரூபமாகி உள்ளன.
ஒவ்வொரு ஆத்மாவும் துன்பத்தில் இருக்கும்போது ஏன் கடவுளை நாடுகிறது? ஏனெனில் கடவுள் ஒருவர் தான் உண்மையிலேயே என்னை மன்னித்து என்னை முழுமைப்படுத்துவார் என்ற புரிதல் ஆத்மாவிற்கு உள்ளது. கடவுளின் இருதயம் பவித்ரமானது, அப்பழுகில்லாதது, தவறிழைத்த ஆத்மாவாயினும் அதை அப்படியே தழுவிக்கொண்டு ஆற்றுப்படுத்தும் கடல் போன்றது. கடவுள் நிமித்தமாக நான் மகிழ்ச்சியோடு இருக்கின்றேன் என்ற ஆழமான உள்ளுணர்வை நான் கொண்டிருப்பேனாகில் மற்றவர்களைப் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை.
எண்ணம், நோக்கம் ஆகியவற்றில் தூய்மையைக் கடைப்பிடித்து முழுமையான பவித்ரத்தோடு நல்ல குணங்களையும் கொண்டு கடவுளோடு நான் எந்த அளவிற்கு நெருக்கமாகி இருக்கிறேனோ அந்த அளவிற்கு நான் மற்றவர்கள் மீது இரக்கம் கொள்ள முடியும். ஒரு நீதிபதி தானே குற்ற உணர்வுடன் இருக்கும்போது அவருடைய இரக்கம் எப்படி வேலை செய்யும்? அவருடைய வினைக்கு (செயலுக்கு) அவரே அடிமை என்பதோடு பிறரை அவர் தீர்ப்பிட முடியாது. எனக்கு நான் பொறுப்பாளியாக இருந்து என் மனசாட்சியின் படி நடப்பதன் மூலம் எனக்கே நான் எஜமானாகும் போது நான் சுத்தமான செயல்களைச் செய்து மற்றவர்கள் மீது இரக்க உணர்வு எனக்கு பெருக்கெடுக்கும்.
நாம் இரக்கத்தையும், பரிதாபத்தையும் (பச்சாதாபத்தையும்) ஒன்றோடொன்று போட்டு குழப்பிக்கொள்வதன் மூலம் பிறரை அக்கினித்தீர்ப்பிற்கு உட்படுத்தி பயனற்றவராக அவர் உணரும்படி செய்துவிடக் கூடாது. இரக்கம் என்பது ஆற்றலை (சக்தியை) உட்புகுத்த வேண்டும். மற்றவருக்காக இரக்கத்தையும், கருணையையும் நாம் பிரஸ்தாபப்படுத்துகிறபோது அஜாக்கிரதையாகவோ, முதிர்ச்சியற்றோ செயல்படாமல் மிகவும் கவனமாக நாம் செயல்பட வேண்டும். சில சமயங்களில் நாம் முன்கூட்டியே தீர்ப்பிட்டு பொய்யான இரக்கத்தை வெளிப்படுத்திவிடுவோம். இது போதிய காலம் மற்றும் நேரமின்மையால் விளைவதாகும். இதனை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்க முடியும். ஒரு மனிதன் ஒரு கூட்டுப்புழுவின் மீது இரக்கம் கொண்டு அது விரைவாக வெளியேறி சென்றுவிடட்டும் என்ற நோக்கத்தில் அதன் கூட்டை முன்கூட்டியே திறந்து விட்டான். பிறகுதான் அவனுக்கு புரிந்தது அந்த கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாக வடிவெடுத்த பின்பு தான் அது பறக்க முடியுமே தவிர, சிறகுகள் முளைக்கும் முன்னே அதை வெளியேற்ற முயன்றது தவறு. கூட்டுக்குள்ளே சிறகுகள் முளைக்கும் வரை காத்திருத்தல் என்பது அவசியமாகிறது. எனவே இரக்கத்தின் பாற்பட்டு மற்றவர்களுக்கு முன்கூட்டியே உதவி செய்து அவர்களின் வளர்ச்சியை நாம் தடுத்து விடுகிறோம்.
சிறிய இரக்கங்கள் சிறிய ஆசிர்வாதங்களாகும். உங்கள் வாழ்கையில் நடக்கும் சிறிய செயல்களை நீங்கள் உற்று நோக்குவதன் மூலம், உங்கள் வாழ்கையில் நிகழப் போகிற பயங்கரமான பெரிய செயல்களை தடுத்து நிறுத்த முடியும். அதற்காக அந்த சிறிய செயல்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழ நீங்கள் விரும்ப வேண்டுமென்பதில்லை.
நிஜமான வாழ்கையை நான் வாழ்வதும் அதை பகிர்ந்து கொள்வதுமே உண்மையான இரக்கம் மற்றும் கருணையின் அர்த்தமாகும். விளைவை நினைத்து நான் வெளிப்படையாக பேசுவதிலிருந்து விலகியிருந்தேனாகில் பிறர் மீது உண்மையிலேயே நான் இரக்க உணர்வு கொள்கிறேனா என்று என்னை நானே கேட்டுக் கொள்வது அவசியமாகிறது. உண்மையான நட்பில் நாம் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் நம் நண்பர்கள் காயப்படுவதை நாம் விரும்புவதில்லை.
மன்னிப்பின் முன்னோட்டமானது என்னை நானே மன்னிப்பதின் அவசியத்தில் அடங்கியிருக்கிறது. FORGIVE என்ற ஆங்கிலச் சொல்லின் அர்த்தம் என்னவெனில் அந்த சொல்லின் முதல் பகுதியாகிய FORE என்பது FIRST அல்லது ‘முதலாவது’ என்று பொருள்படும். அந்த சொல்லின் மறுபகுதியாகிய GIVE என்பது ‘கொடுப்பது’ அல்லது தனக்குத்தானே கொடுத்துக்கொள்வது என்று பொருள்படும். கொடுப்பது என்றால் என்ன? அல்லது எதைக் கொடுப்பது?.
நான் வெளியில் கொடுத்து தீர்த்த ஆற்றலை(சக்தியை) எனக்கு நானே கொடுத்துக்கொள்ள வேண்டும். பிறரை மன்னித்து நடப்பது ஆரோக்கியமானது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். ‘மன்னிக்கமாட்டேன்’ என்பதன் பொருள் என்னவென்றால், இரும்பு சங்கிலியால் என்னை நான் பிணைத்துக்கொண்டு கடந்த காலத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு முன் செல்ல விடாமல் என்னை நானே தடுத்துக் கொண்டிருப்பதற்கு ஒப்பானதாகும்.
இதுவே நேரம்……… இரக்கத்தின் ஒளியூட்ட சுய அன்பின் இறுதியான வெளிப்பாடு. அன்பு மற்றும் கருணையின் நிமித்தமாக நாம் செயல்படுவோமாயின் நம் உறவுகளை நிலைப்படுத்த குறைந்தளவு போராட்டமே போதுமானதாகும். உன் வாழ்க்கையில் சிறிதளவு இரக்கத்தை நீ கண்டுகொண்டால், உன் வாழ்க்கை சக்கரத்தில் எண்ணெய் ஊற்றி தொடர்ந்து சுழல வைக்கும் ஆசிர்வாதத்தை பெற்றிடுவாய். கடவுளைப் போல் தூய உள்ளத்தை நீ பெற்று இரக்கத்தால் நிரம்பி வழியும் கருணை மிக்க இதயத்தை பெற்றிடுவாய்.
| பலவீனன் எப்பொழுதும் மன்னிக்க மாட்டான்
மன்னிப்பு பலசாலியின் சிறப்புத் தகுதி ஆகும். -மகாத்மா காந்தி |



